குவாலியர்: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அர்ஷ்தீப் சிங் இந்திய அணியின் பந்து வீச்சு குழுவை வழிநடத்தியதோடு தனிப்பட்ட முறையிலும் சிறப்பாக பந்து வீசி முதிர்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார். அவர் 3.5 ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.
ஒரு ஓவருக்கு சராசரியாக 3.65 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இருந்தார். வங்கதேச அணி இந்தப் போட்டியில் 127 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், இந்திய அணி 11.5 ஓவர்களில் எல்லாம் இலக்கை எட்டி வென்றது. ஆட்டநாயகன் விருதை அர்ஷ்தீப் சிங் வென்றார். இந்தப் போட்டியில் மிகுந்த முதிர்ச்சியோடு பந்து வீசிய அர்ஷ்தீப் சிங் 2022 இல் தான் சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

2022 ஆம் ஆண்டுக்கு பின் இந்திய அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அர்ஷ்தீப் சிங் முதல் இடத்தில் இருக்கிறார். அவர் 2022இல் அறிமுகம் ஆனது முதல் 55 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 86 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். அவருக்கு அடுத்து இருக்கும் ஹர்திக் பாண்டியா இதே காலகட்டத்தில் 50 விக்கெட் கூட வீழ்த்தவில்லை. அந்த அளவுக்கு இந்திய டி20 அணியில் அர்ஷ்தீப் சிங் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.
இந்த போட்டியில் இந்திய பந்துச்சாளர்கள் அனைவரும் ஒரு ஓவருக்கு ஆறு ரன்கள் என்ற அளவில் விட்டுக் கொடுத்து இருந்தனர். மயங்க் யாதவ் மட்டுமே ஒரு ஓவருக்கு 5.25 ரன்கள் என்ற ரன் விகிதத்தில் விட்டுக் கொடுத்திருந்தார். ஆனால், அர்ஷ்தீப் சிங் ஒரு ஓவருக்கு வெறும் 3.65 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.
அர்ஷ்தீப் சிங் சிறப்பாக பந்து வீசியதோடு இந்திய அணியில் அறிமுகம் ஆகி இருந்த மயங்க் யாதவ் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் பந்து வீசும் போது அவர்கள் அருகே சென்று அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார். அவர்கள் சிறப்பாக பந்து வீசியபோது ஓடிச் சென்று அவர்களை பாராட்டினார்.

அந்த வகையில் இந்திய பந்து வீச்சாளர்களின் தலைவனாகவும் அர்ஷ்தீப் சிங் செயல்பட்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணி 11.5 ஓவர்களில் எல்லாம் வெற்றி இலக்கை எட்டியது. ஹர்திக் பாண்டியா அதிரடியாக ஆடி 16 பந்துகளில் 39 ரன்களை எடுத்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார்.