மும்பை: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டிராபிக்கு இம்முறை இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறது. கடந்த 2 முறையும் ஆஸ்திரேலியா மண்ணில் இந்திய அணி அபார வெற்றி பெற்றிருப்பதால், ஹாட்ரிக் வெற்றியை பெற வேண்டும் என்பதில் இந்திய அணி நிர்வாகம் தீவிரமாக உள்ளது.
அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்தால், இந்திய அணியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாத நிலை உள்ளது. இதனாக் கம்பீர், அஜித் அகர்கர் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய மூவரும் இந்திய அணி வீரர்களை தயார் செய்வதில் தீவிரமாக உள்ளனர்.

அந்த வகையில் இந்திய டெஸ்ட் அணியில் உள்ள மிகமுக்கிய பிரச்சனை இடதுகை வேகப்பந்துவீச்சாளர் இல்லாதது தான். இதனால் துலீப் டிராபி, வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்பின் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் விளையாட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான ரேஸில் இந்திய அணியின் அர்ஷ்தீப் சிங், கலீல் அஹ்மத் மற்றும் யாஷ் தயாள் ஆகிய மூவரும் இருக்கின்றனர். ஏற்கனவே அர்ஷ்தீப் சிங்கை கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட வைத்து இந்திய அணி சில மாற்றங்களை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது. இன்னொரு பக்கம் கலீல் அஹ்மத் ஜிம்பாப்வே டி20 தொடர், இலங்கை டி20 மற்றும் ஒருநாள் தொடரில் தேர்வு செய்யப்பட்டு கம்பீரின் நேரடி கண்காணிப்பில் இருந்துள்ளார்.
அதேபோல் யாஷ் தயாள் என்சிஏவில் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். ஐபிஎல் தொடரில் ரிங்கு சிங் கொடுத்த பேரிடியில் இருந்து மீண்டு வந்துள்ள யாஷ் தயாள், ஸ்விங் பந்துகளை வீசுவதில் வல்லவராக வலிமை பெற்றுள்ளார். ஆர்சிபி அணிக்காக ஆடிய போட்டிகளிலேயே இதனை ரசிகர்கள் கண்டறிந்து பலரும் பாராட்டினர்.
ஆனால் மூவரில் ஒருவரை மட்டுமே இந்திய அணியில் தேர்வு செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. ஏனென்றால் பும்ராவுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு தான், இந்திய அணி இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களை வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் பயன்படுத்தவுள்ளது. இதனால் 3 பேரில் யாருக்கு கவுதம் கம்பீரின் ஆதரவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.