சென்னை: இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் அர்ஷ்தீப் சிங் சேர்க்கப்படவில்லை. முன்னதாக அவர் இந்த தொடருக்காக உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் ஆடுமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தார். அதன் மூலம், பிசிசிஐ மற்றும் தேர்வு குழுவினர் அர்ஷ்தீப் சிங்கை டெஸ்ட் அணியில் தேர்வு செய்ய இருப்பதாக தகவல் பரவி இருந்தது.
ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக அவர் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தேர்வு செய்யப்படவில்லை. இதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் அர்ஷ்தீப் சிங் மிகக் குறைவான உள்ளூர் டெஸ்ட் போட்டிகளிலேயே விளையாடி இருந்தார். அவர் டி20 போட்டிகளிலேயே அதிக அளவில் ஆடி இருக்கிறார். அதனாலேயே இந்திய டி20 அணியிலும் அவர் தேர்வு செய்யப்பட்டிருந்தார். 2024 டி20 உலக கோப்பையில் அவர் மிகச் சிறப்பாக பந்து வீசி இருந்தார்.

பின்னர் அவர் இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால், அங்கு அவரால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இதனிடையே அவரை டெஸ்ட் அணிக்கும் தேர்வு செய்யும் வகையில் உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் ஆடுமாறு அறிவுறுத்தி இருந்தது தேர்வு குழு. அர்ஷ்தீப் சிங் துலீப் ட்ராபி தொடரில் ஆடிய போதும் சிறப்பாக பந்து வீசவில்லை.
மறுபுறம் வங்கதேச அணி பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 - 0 என கைப்பற்றி வரலாற்று வெற்றியை பெற்றது. இதன் மூலம், வங்கதேசம் வலுவான அணியாக காட்சி அளிக்கிறது. எனவே, எந்த வகையிலும் இந்திய அணி பலவீனமாக இருந்து விடக்கூடாது என்பதால் அதிக அனுபவம் இல்லாத அர்ஷ்தீப் சிங்கை நீக்கிவிட்டு பும்ராவை அணியில் சேர்த்து இருக்கிறது தேர்வு குழு.
முன்னதாக வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா விளையாட மாட்டார் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் அர்ஷ்தீப் சிங்கை விட பும்ரா அணிக்கு முக்கியம் என்பதை உணர்ந்த தேர்வு குழுவினர் கடைசி நேரத்தில் பும்ராவை அணியில் சேர்த்து இருக்கின்றனர். யாஷ் தயாள் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் துலீப் டிராபி போட்டிகளில் சிறப்பாக பந்து வீசியதால் அவர்களையும் மாற்று வேகப் பந்துவீச்சாளர்களாக தேர்வு செய்துள்ளது பிசிசிஐ.
அர்ஷ்தீப் சிங் போலவே கலீல் அஹ்மதையும் தேர்வுக் குழு உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் ஆடுமாறு கூறி இருந்தது. ஆனால், அவரையும் இந்திய டெஸ்ட் அணியில் தேர்வு செய்யவில்லை. அவரும் தற்போது ஏமாற்றம் அடைந்து இருக்கிறார்.
வங்கதேச டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி - ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, கே எல் ராகுல், சர்ஃபராஸ் கான், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ரவீந்திர ஜடேஜா , அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் யாஷ் தயாள்.