குவாலியர் : வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபாரமாக பந்து வீசி வருகிறது. ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட ஸ்டார் வீரர்கள் ஓய்வு பெற்ற நிலையில் பும்ரா, கில் ஜெய்ஸ்வால் போன்ற வீரர்களும் இந்த தடவை இடம்பெறவில்லை.
இந்த நிலையில் சூரிய குமார் தலைமையில் சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஆர்ஸ்தீப் சிங், வாஷிங்டன் சுந்தர் போன்ற வீரர்கள் இடம் பிடித்திருக்கிறார்கள். இந்த நிலையில் பும்ரா இல்லாத சூழலில் இந்திய வேகப்பந்துவீச்சு என்ன செய்யப் போகிறது என்று கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

ஆனால் பும்ரா இல்லை என்றால் என்ன? நான் இருக்கிறேன் என்று 25 வயது வேகப்பந்துவீச்சாளரான ஆர்ஸ்தீப் சிங் அபாரமாக பந்து வீசினார். இவருடைய அனல் பறக்கும் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் வங்கதேச வீரர்கள் கடுமையாக தடுமாறினர். ஆட்டத்தின் முதல் ஓவரின் ஐந்தாவது பந்தில் வங்கதேச அணியின் நட்சத்திர வீரர் லிட்டன் தாஸ் பந்தை தூக்கி அடிக்க ரிங்கு சிங் இடம் கேட்ச் ஆனார்.
இதனால் வங்கதேச அணி ஐந்து ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது. இதனை அடுத்து ஆட்டத்தின் மூன்றாவது ஓவரை ஆர்ஸ்தீப் மீண்டும் வீச வந்தார். அப்போது தொடக்க வீரர் பர்வேஷ் அடித்த பந்து எட்ஜ் ஆகி ஸ்டெம்பை பதம் பார்த்தது. இதன் மூலம் அவர் எட்டு ரன்களில் ஆட்டம் இழந்தார். வங்கதேச அணி 14 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.
இரண்டு ஓவர்களை வீசிய ஆர்ஸ்தீப் சிங் எட்டு ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட் வீழ்த்தினார். நீண்டகால ஓய்வுக்குப் பிறகு ஹர்திக் பாண்டியா பந்துவீசி வருகிறார். அவருடைய ஓவரில் ரன்கள் கொஞ்சம் கசிந்தாலும் மாயங் யாதவ், ஆர்ஸ்தீப் அபாரமாக பந்து வீசி வருகின்றனர்.
ரன் குவிப்புக்கு சாதகமான இந்த மைதானத்தில் வங்கதேசத்தை குறைந்த ஸ்கோரில் சுருட்டி அதனை இந்தியா சேசிங் செய்ய முயற்சித்து வருகிறது. ஆர்ஸ்தீப் சிங் டெஸ்டில் விளையாட வேண்டும் என்று பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வலியுறுத்தி வரும் நிலையில் அவர் வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் பட்டையை கிளப்பி வருகிறார்.