மும்பை : ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக அறிமுகமாகி பட்டையைக் கிளப்பிய ஆர்ஸ்தீப் சிங் தற்போது இந்திய டி20 அணியின் மிகவும் முக்கியமான வீரராக மாறிவிட்டார். இதுவரை 55 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 86 விக்கெட்டை ஆர்ஸ்தீப் சிங் பிடித்திருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் கடந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு ஆர்ஸ்தீப் சிங்கும் ஒரு முக்கியமான காரணமாக இருக்கிறார். 25 வயதான ஆர்ஸ்தீப் சிங் டெஸ்ட் கிரிக்கெட்டில் சேர்க்க வேண்டும் என பல வீரர்களும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் எதிர்காலம் குறித்து கவலைப்படுவதில்லை என்று ஆர்ஸ்தீப் சிங் தெரிவித்திருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், என்னுடைய விளையாட்டை நான் மிகவும் நேசிக்கின்றேன். நான் இந்திய அணிக்காக அறிமுகமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது என்று சொன்னால் நம்பவே முடியவில்லை.
காலம் வேகமாக ஓடிவிட்டது. இதனால் நான் எப்போதுமே நிகழ்காலத்தில் என்ன நடக்கிறது என்பதை மட்டுமே கவனிப்பேன். நிகழ்காலத்தை முழு கவனமும் செலுத்தி ஒவ்வொரு நிகழ்வையும் மகிழ்ச்சியுடன் எதிர்கொள்வேன். இதுதான் என்னுடைய வாழ்நாள் வெற்றியின் ரகசியமாகவும் கருதுகிறேன். இன்று எனக்கு ஓய்வு நாள் என்றால் இந்த ஓய்வு நாளில் நான் எவ்வாறு சந்தோஷமாக இருக்கப் போகிறேன் என்பதில் தான் கவனமாக இருப்பேன்.
நாளை பற்றி எனக்கு எந்த கவலையும் கிடையாது. நாளை வரும் போது அப்போது பார்த்துக் கொள்ளலாம். 2026 டி20 உலக கோப்பைக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கிறது. எனவே அது பற்றி எல்லாம் நான் யோசிக்க விரும்பவில்லை. டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைத்தாலும் அதில் நான் சிறப்பாக செயல்படுவேன்.
இந்தியாவுக்காக எந்த போட்டிகளில் விளையாட வேண்டும் என்றாலும் அதில் 100% என்னுடைய பங்களிப்பை கொடுப்பேன். நெருக்கடியான கட்டத்தில் எவ்வாறு விளையாட வேண்டும் என்பது குறித்து யோசிப்பேன். அப்படி ஒரு சூழலில் விளையாடும் போது நமது திறமைகள் வெளிப்படும்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் நாம் பொறுமையாக இருந்து பந்து வீசினால் மட்டுமே விக்கெட் கிடைக்கும். ஆனால் டி20 கிரிக்கெட்டில் பொறுமையாக இருக்க கூடாது. விக்கெட் எடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்று ஆர்ஸ்தீப் சிங் கூறியுள்ளார்.