மும்பை: வங்கதேசம் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணியின் துணைக் கேப்டன் சுப்மன் கில்லுக்கு ஓய்வு வழங்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவரது இடத்தில் களமிறங்க எந்த வீரருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற விவாதம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கவுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி செப்.19ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள நிலையில், 2வது டெஸ்ட் போட்டி செப்.27ஆம் தேதி கான்பூர் மைதானத்தில் நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்பின் வங்கதேசம் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது. அக்.6ஆம் தேதி நடக்கும் முதல் டி20 போட்டி குவாலியர் மைதானத்திலும், அக்.9ஆம் தேதி நடக்கும் 2வது டி20 போட்டி டெல்லி மைதானத்திலும், அக்.12ஆம் தேதி நடக்கும் 3வது டி20 போட்டி ஐதராபாத் மைதானத்திலும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான இந்திய அணி விரைவில் தேர்வு செய்யப்படவுள்ளது. 2வது டெஸ்ட் போட்டிக்கு முன்பாகவே டி20 அணிக்கான அணியும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வங்கதேசம் அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் துணைக் கேப்டனான சுப்மன் கில்லுக்கு ஓய்வு வழங்கப்பட முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
ஏனென்றால் இங்கிலாந்து டெஸ்ட் தொடர், ஐபிஎல், டி20 உலகக்கோப்பைக்கான பேக் அப் வீரர், ஜிம்பாப்வே டி20 தொடர், இலங்கை டி20 மற்றும் ஒருநாள் தொடர் என்று சுப்மன் கில் தொடர்ச்சியாக விளையாடி வந்திருக்கிறார். தற்போது துலீப் டிராபியில் விளையாடியதோடு மட்டுமல்லாமல் வங்கதேசம் டெஸ்ட் தொடருக்கான பயிற்சி முகாமில் கலந்து கொண்டிருக்கிறார். இதன்பின் வங்கதேச டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளார்.
இதனால் சுப்மன் கில்லின் பணிச்சுமையை குறைக்கும் வகையில் சுப்மன் கில்லுக்கு ஓய்வு வழங்கப்படவுள்ளது. இதனால் சுப்மன் கில்லுக்கு மாற்றாக எந்த வீரருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற விவாதம் தொடங்கியுள்ளது. ஏற்கனவே ஜிம்பாப்வே டி20 தொடரில் அபிஷேக் சர்மா, ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்டோர் மிகச்சிறப்பாக விளையாடியுள்ளனர்.
இதனால் மீண்டும் அவர்களில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இடது - வலது காம்பினேஷனை விரும்புபவர். இதனால் தொடக்க வீரராக இடதுகை பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருப்பதால், வலதுகை பேட்ஸ்மேனான ருதுராஜ் கெய்க்வாட் சேர்க்கப்படவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே இந்திய அணி நிர்வாகம் ருதுராஜ் கெய்க்வாட்-க்கு போதுமான வாய்ப்புகளை அளிக்கவில்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. டி20 கிரிக்கெட்டில் சுமாரான வீரராக இருக்கும் சுப்மன் கில்லுக்கு வழங்கப்பட்டுள்ள பாதியளவிற்கான வாய்ப்புகளை கூட ருதுராஜ் கெய்க்வாட்-க்கு அளிக்கவில்லை என்று பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர்.
ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு சீசனிலும் கன்சிஸ்டன்சியுடன் 500 ரன்களுக்கு மேல் ருதுராஜ் கெய்க்வாட் விளாசி வருகிறார். தற்போது துலீப் டிராபியிலும் அசத்தலான ஆட்டத்தை ருதுராஜ் கெய்க்வாட் வெளிப்படுத்தி இருப்பதால், பிசிசிஐ நிச்சயம் அவருக்கு வங்கதேச டி20 தொடரில் வாய்ப்பளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.