சிட்னி: ரிஷப் பண்ட் சுமார் 634 நாட்களுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்பி இருப்பது ஆஸ்திரேலிய அணிக்கு கிலியை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் களம் இறங்கினார். டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் சிறந்த விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் என்ற பெருமையை அவர் முன்பே பெற்றிருந்த நிலையில், அதை தக்க வைக்கும் வகையில் அதிரடியாக ஆடி சதம் அடித்து இருந்தார்.
சென்னை சேப்பாக்கத்தில் நடந்த வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அவர் 109 ரன்கள் சேர்த்து இருந்தார். அவர் அரை சதம் அடித்த பின் டி20 போட்டி போல அதிரடியாக ஆடி, பவுண்டரிகளை விளாசி சதம் அடித்தது இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதே வேளையில் ஆஸ்திரேலிய அணிக்கு இது பயத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் வரும் டிசம்பர் மாதம் விளையாட உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணியை வீழ்த்தி இந்த தொடரை வென்று காட்ட வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் உறுதி கொண்டு இருக்கிறார்.
அவர் ரிஷப் பண்டின் வருகை குறித்து தனது கவலையை வெளிப்படுத்தி இருக்கிறார். இது குறித்து அவர் பேசுகையில், "கடந்த இரண்டு தொடர்களாக ரிஷப் பண்ட் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார். நாங்கள் நிச்சயம் முயற்சி எடுத்து அவரை அமைதியாக்குவோம்." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும், "ரிஷப் பண்ட் ரிவர்ஸ் ஸ்லாப் அடிக்கும் ஆற்றல் கொண்டவர். அது அற்புதமான ஷாட். ரிஷப் பண்ட் என்றாலே அதுவும் ஒரு பகுதி. நாங்கள் அதற்கு பழகிவிட்டோம். ஒவ்வொரு அணியிலும் ஒன்று அல்லது இரண்டு வீரர்கள் அவரை போல் இருக்கிறார்கள். எங்கள் அணியிலும் டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் போன்ற வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அதிரடியாக ஆடும் மனநிலை கொண்டவர்கள். நாம் குறிப்பிட்ட ஒரு பகுதியை தவறவிட்டால், அவர்கள் போட்டியை தங்கள் வசம் எடுத்துச் செல்வார்கள்." என்று கூறி இருக்கிறார் பாட் கம்மின்ஸ்.