துபாய்: 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பேட்டிங் தடுமாறியதற்கு, பேட்டிங் வரிசையை மாற்றியதுதான் காரணம் என ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும், அக்சர் படேல் 15 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்ததைச் சுட்டிக்காட்டி ரசிகர்கள் கொந்தளித்து உள்ளனர். மேலும், அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்சனையாவது கடைசி ஓவர்களில் களமிறக்கி இருக்கலாம் என தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர்.
முக்கியமான நேரத்தில் விக்கெட் விழுந்த பிறகும் சஞ்சு சாம்சனுக்கு பேட்டிங் செய்யவே வாய்ப்பு அளிக்காதது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் சுப்மன் கில் 19 பந்துகளில் 29 ரன்களும், அபிஷேக் ஷர்மா 37 பந்துகளில் 75 ரன்களும் எடுத்தனர். ஆனால், அடுத்து வந்த சிவம் துபே 2 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 5 ரன்களும் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தனர்.

ஹர்திக் பாண்டியா ஓரளவு சமாளித்து 29 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். ஆனால் அவரும் அதிரடியாக ஆடவில்லை. ஆறாம் வரிசையில் இறங்கிய திலக் வர்மா ஏழு பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே எடுத்தார். முதல் ஆறு வரிசையிலேயே சிவம் துபே மற்றும் திலக் வர்மாவின் பேட்டிங் ஆர்டர் மாற்றப்பட்டு இருந்தது.
இது ஒருபுறம் இருக்க, ஏழாவது வரிசையில் அக்சர் படேல் பேட்டிங் செய்ய வந்தார். அப்போதாவது சஞ்சு சாம்சனை இறக்குவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இத்தனைக்கும் சஞ்சு சாம்சன், முதல் மூன்று வரிசையில் மட்டுமே ஆடக்கூடிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆவார். அவருக்கு இறுதிவரை பேட்டிங் செய்ய வாய்ப்பு அளிக்கவில்லை. அவரை நம்பாமல் அக்சர் படேல் ரன் குவிப்பார் என நம்பி பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அனுப்பி வைத்தார்.
ஆனால், அக்சர் படேல் ரன் குவிக்க முடியாமல் திணறினார். அவரால் எந்த பந்தையும் சரியாக அடிக்க முடியவில்லை. அதனால் 15 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவருக்குப் போதிய அளவிலான சர்வதேச பேட்டிங் பயிற்சி இல்லை என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது. ஓமன் அணிக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் அரை சதம் அடித்திருந்தார். அதை வைத்தாவது அவருக்கு ஏழாவது வரிசையில் வாய்ப்பு அளித்திருக்கலாம்.
பயிற்சியாளர் கம்பீர் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் செய்த இந்த பேட்டிங் ஆர்டர் சொதப்பலால் இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் மட்டுமே எடுத்தது. 11 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 112 ரன்களுடன் இருந்தது. அதனால் 200 ரன்கள் வரை எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய அணி 168 ரன்கள் எடுத்தது மிகவும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.