துபாய்: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியா ஒன்றும் வீழ்த்தவே முடியாத அணி அல்ல என்று வங்கதேச அணியின் தலைமை பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் தெரிவித்துள்ளார். வங்கதேச வீரர்கள் தங்களின் முழு திறமையையும் வெளிப்படுத்துவார்கள் என்று கூறிய அவர், இந்திய அணிக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறார்.
ஆசியக் கோப்பை தொடரில் நாளை நடக்கும் சூப்பர் 4 போட்டியில் இந்திய அணியை எதிர்த்து வங்கதேசம் அணி விளையாட உள்ளது. ஏற்கனவே நடந்த சூப்பர் 4 போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி வங்கதேசம் அபார வெற்றியை பெற்றுள்ளதால், இந்திய அணிக்கு சவால் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் நாகினி டான்ஸ் உடன் ஏற்கனவே சில பஞ்சாயத்து இருப்பதால், அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆசியக் கோப்பை தொடரை பொறுத்தவரை இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வியடையவில்லை. அதேபோல் இந்தப் போட்டியில் வெல்லும் அணி கிட்டத்தட்ட ஆசியக் கோப்பை இறுதிப்போட்டிக்கு தங்களின் இடத்தை உறுதி செய்ய முடியும் என்று பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வங்கதேச அணியின் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பில் சிம்மன்ஸ் பேசுகையில், இந்தியா ஒன்றும் வீழ்த்த முடியாத அணி கிடையாது. எந்த அணியாலும் இந்திய அணியை வீழ்த்த முடியும். ஏனென்றால் கிரிக்கெட் போட்டி களத்தில் விளையாடப்படுவதுதான். ஏற்கனவே வென்றதை வைத்து எத முடிவும் எடுக்க முடியாது. ஒவ்வொரு போட்டியிலும் வெல்ல வேண்டும். மூன்றரை மணி நேரத்தில் எப்படி விளையாடுகிறோமோ அப்படிதான் முடிவு அமையும்.
எங்கள் அணியின் வீரர்களின் அவர்களின் முழு திறமையையும் வெளிப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அவர்களின் அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்துவார்கள். இந்திய அணியுடன் ஆடும் போட்டிகளுக்கு எதிர்பார்ப்பு அதிகம். ஏனென்றால் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியா தான் நம்பர் 1ஆக உள்ளது. அதனால் சவால் நிறைந்த போட்டியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
கடந்த போட்டியை பொறுத்தவரை பிட்சில் பெரிய மாற்றம் இருந்ததாக தெரியவில்லை. நான் பார்த்த வரை மிகச்சிறந்த பிட்ச்களில் இதுவும் ஒன்றுதான். பேட்ஸ்மேன்களுக்கு சிறந்த பிட்சாக இருந்தது. பவுலர்கள் நிச்சயம் கொஞ்சம் திறமையை வெளிப்படுத்த வேண்டும். அதனால் டாஸ் வென்றாலோ அல்லது தோல்வியடைந்தாலும் கவலை இல்லை என்று தெரிவித்துள்ளார்.