குவாலியர் : இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி அதில் படுதோல்வியை தழுவியது. இதனை அடுத்து மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் நேற்று குவாலியரில் நடைபெற்றது. முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனை அடுத்து களமிறங்கிய வங்கதேச அணி வீரர்கள் 127 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர். இதனை அடுத்து களம் இறங்கிய இந்திய அணி 11.5 வது ஓவரில் எல்லாம் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

இந்த தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள வங்கதேச அணி கேப்டன் நஜ்முல் ஹூசைன் சாண்டோ, நாங்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டுமே சரியாக ஆரம்பிக்கவில்லை. டி20 கிரிக்கெட்டில் முதல் ஆறு ஓவர்கள் என்பது மிகவும் முக்கியம். ஆனால் நாங்கள் அதில் சரியாக செயல்படாததால் போட்டி அங்கேயே முடிந்து விட்டது.
பயமின்றி பாசிட்டிவாக டி20 போட்டியில் விளையாட வேண்டும் என்று தான் நாங்கள் நினைத்தோம். ஆனால் அதற்கு முதல் சில ஓவர்களை பொறுமையாக விளையாடி போட்டியை எதிர்கொள்ள வேண்டியது அவசியம். முதல் டி20 போட்டியில் நாங்கள் சரியான பிளான் உடன் போட்டியை அணுகவில்லையோ என்று தோன்றுகிறது.
இரண்டாவது டி20 போட்டியில் இன்னும் எங்களுடைய திட்டத்தை சிறப்பாக தீட்டி களமிறங்க வேண்டும். டி20 போட்டியில் பெரிய ஷாட் ஆடி அதிரடியாக ரன் குவிப்பது மட்டும் முக்கியம் கிடையாது. பேட்ஸ்மேன்கள் பந்தை வீணாக்காமல் ரன்களை ஓடி எடுப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். டி 20 கிரிக்கெட்டில் முதல் சில ஓவர்களில் விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டால் பின்னர் கைவசம் இருக்கும் விக்கெட்டை வைத்துக்கொண்டு அதிரடியாக விளையாடி பெரிய இலக்கை நிர்ணயிக்க முடியும்.
முதல் டி20 போட்டியில் ரிஷாத் மற்றும் முஸ்தஃபீஸூர் ரஹ்மான் ஆகியோர் நன்றாக பந்து வீசினார்கள். ஆனால் நாங்கள் பேட்டிங்கில் பெரிய அளவு ரன்கள் சேர்க்கவில்லை. இதனால் பவுலர்களும் தற்காத்துக் கொள்ள ரன்கள் இல்லாமல் தடுமாறி இருக்கிறார்கள் என்று வங்கதேச கேப்டன் நஜ்முல் ஹுசைன் கூறியுள்ளார்.