கான்பூர்: வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அதிரடியாக ஆடி கடைசி இரண்டு நாட்களில் இரண்டு இன்னிங்க்ஸ் ஆட்டம் ஆடி வெற்றி பெற்றதை குறித்து வங்கதேச அணியின் தலைமை பயிற்சியாளர் சண்டிகா ஹதுருசிங்கா புலம்பி இருக்கிறார்.
இந்திய அணி இப்படி அதிரடியாக ஆடும் என்பதை வங்கதேச அணி எதிர்பார்க்கவில்லை எனவும், அதனால் இந்திய அணியின் அதிரடி ஆட்டத்திற்கு உடனடியாக எதிர்வினை ஆற்ற முடியாமல் போனதாகவும் அவர் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும், வங்கதேச வீரர்கள் சரியாக விளையாடவில்லை எனவும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

வங்கதேச அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு எதிராக விளையாடி இரண்டிலும் தோல்வி அடைந்துள்ளது. அதிலும் இரண்டாவது போட்டியின் இரண்டரை நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. ஆனால், மீதம் இருந்த இரண்டரை நாளில் இந்திய அணி அதிரடியாக பேட்டிங் செய்து வங்கதேச அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. மேலும், அது டெஸ்ட் வரலாற்றில் நான்காவது மிக சிறிய போட்டியாக அமைந்தது. இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் பேட்டிங் டெஸ்ட் வரலாற்றிலேயே அதிக ரன் ரேட் பெற்ற ஆட்டமாக அமைந்தது. இந்த நிலையில் தங்கள் தோல்வி பற்றி வங்கதேச அணியின் பயிற்சியாளர் சண்டிகா ஹதுருசிங்கா பேசுகையில், "எங்கள் செயல்பாட்டை வைத்து பார்க்கும் போது இந்த தோல்வி மிகவும் வலிக்கிறது. இந்தியாவின் அணுகுமுறையை இதற்கு முன் நாங்கள் இப்படி பார்த்ததில்லை. இதற்கான பாராட்டுக்கள் நிச்சயம் ரோஹித் சர்மா மற்றும் இந்திய அணிக்கு நாம் கொடுத்தே ஆக வேண்டும்." என்றார்.
மேலும், "இந்த ஒரு சூழ்நிலையில் இப்படி ஒரு அணுகுமுறையை செயல்படுத்தி, போட்டியில் வெற்றியும் பெற்று இருக்கிறார்கள். நாங்கள் அவர்களது அணுகுமுறைக்கு உடனடியாக எதிர்வினை ஆற்ற முடியாமல் இருந்தோம். வங்கதேச அணியின் பேட்டிங் இந்த தொடரில் மிகவும் ஏமாற்றமாக இருந்தது. இதற்கு முன் நடந்த பாகிஸ்தான் தொடரில் எங்கள் அணியின் சில பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடி இருந்தார்கள். எங்கள் பேட்டிங் சரியாக இல்லாததற்கு இந்திய அணியின் தரமான பவுலர்களும் ஒரு முக்கிய காரணம்." என்றார்.
மேலும், "இந்த தொடரில் வெளிப்பட்ட திறமை என்பது மிகவும் அதிகம். இதில் இருந்து நாங்கள் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்கிறோம். இதுதான் சிறந்த அணி. இந்தியாவில், இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது என்பது மிகவும் கடினமான பணி. நாங்கள் எந்த அளவுக்கு முன்னேற வேண்டும் என்பதை உணர்ந்து இருக்கிறோம். இரண்டு அணிகளுக்கும் இடையிலான திறமையின் வித்தியாசத்தை நான் கண்கூடாக பார்த்தேன். நிச்சயம் நாங்கள் நிறைய முன்னேற வேண்டும்." என்றார் வங்கதேச அணியின் பயிற்சியாளர் சண்டிகா ஹதுருசிங்கா.