சென்னை: வங்கதேச அணி, இந்திய அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் இந்திய அணிக்கு எளிதாக இருக்காது என்ற கருத்தை விமர்சகர்கள் முன்வைத்து வருகின்றனர். சில வாரங்கள் முன்பு நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2 - 0 என வங்கதேசம் வென்றது.
அதற்கு முன் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெற்றி பெற்று இருக்காத வங்கதேச அணி அடுத்தடுத்து இரண்டு போட்டிகளை வென்று, டெஸ்ட் தொடரையும் முழுமையாக கைப்பற்றியது கிரிக்கெட் உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எனினும், பாகிஸ்தான அணி பலவீனமாக இருப்பதால் வங்கதேசம் வென்று விட்டது என்ற ஒரு கருத்தை பல இந்திய ரசிகர்கள் முன்வைத்து வருகின்றனர்.

இந்திய அணியை வங்கதேச அணியால் வீழ்த்த முடியாது எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில், வங்கதேசம் எப்படி பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது என்பதை சுட்டிக்காட்டுகிறார்கள் விமர்சகர்கள். இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி ஒரு கட்டத்தில் வங்கதேச அணிக்கு எதிராக பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி இருந்தது. ஆனால், அதை உடைத்து வங்கதேசம் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 448 ரன்கள் சேர்த்தது. அடுத்த அடிய வங்கதேச அணி ஒரு கட்டத்தில் 332 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து இருந்தது. எப்படியும் 400 ரன்கள் எடுப்பதற்குள் வங்கதேச அணி ஆல் அவுட் ஆகிவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த அணி 565 ரன்கள் சேர்த்து பாகிஸ்தான் அணிக்கு அதிர்ச்சி அளித்தது.
அந்தப் போட்டி டிராவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாகிஸ்தான் அணியை இரண்டாவது இன்னிங்ஸில் 146 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது வங்கதேச அணி. அடுத்து ஐந்தாம் நாள் ஆட்டத்தில் வங்கதேசம் அபாரமாக பேட்டிங் செய்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் பின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 274 ரன்கள் எடுத்தது.
அடுத்து ஆடிய வங்கதேச அணி 26 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்தது. அப்போது வங்கதேச அணி 150 ரன்கள் எடுப்பதே கடினம் என கருதப்பட்ட நிலையில், அந்த அணி அங்கிருந்து 262 ரன்கள் சேர்த்தது. பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. 155 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் வங்கதேச அணி அந்த போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்த இரண்டு போட்டிகளிலும் வங்கதேச அணி பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு இருந்தது. மேலும், பேட்டிங்கில் முதல் ஆறு பேட்ஸ்மேன்கள் ஆட்டம் இழந்தாலும் பின்வரிசை வீரர்களை வைத்துக் கொண்டே அதிக ரன்களையும் சேர்த்து இருந்தது வங்கதேச அணி. இதை விமர்சகர்கள் சுட்டிக் காட்டி இந்திய அணியை எச்சரித்து உள்ளனர். இது வங்கதேசம் அணியின் போராட்ட குணத்தை வெளிப்படுத்துகிறது. இதற்கு முன் வங்கதேசம் இத்தனை வீரியமாக டெஸ்ட் போட்டிகளில் ஆடியதில்லை.
என்னதான் பாகிஸ்தான் அணி பலவீனமாக இருந்தாலும் வங்கதேச அணி இரண்டு போட்டிகளிலுமே மோசமான சரிவில் இருந்து மீண்டு வந்து இருப்பது இந்திய அணிக்கு ஒரு எச்சரிக்கை ஆகும். அதன் காரணமாகவே வங்கதேச டெஸ்ட் தொடரில் பும்ரா விளையாட மாட்டார் என முதலில் கூறிவிட்டு, பின்னர் அவரை அணியில் சேர்த்து இருக்கிறது பிசிசிஐ.