சென்னை: இந்திய அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வங்கதேச அணி மோத உள்ளது. இந்தத் தொடருக்காக இந்தியா வரும் முன் வங்கதேச வீரர்களுக்கு பரிசுத் தொகையை அறிவித்துள்ளது வங்கதேச கிரிக்கெட் அமைப்பு. பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பெற்ற வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்காக இந்த பரிசுத் தொகை அளிக்கப்பட்டது.
இது ஒருவகையில் இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட வங்கதேச வீரர்களுக்கு ஊக்குவிப்பாக அமைந்து உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அதற்கு முன் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வங்கதேசம் வெற்றி பெற்றதில்லை என்ற நிலை இருந்தது.

ஆனால், இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் வங்கதேசம் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. அந்த வெற்றி வரலாற்று வெற்றியாக அமைந்த நிலையில், இரண்டாவது போட்டியிலும் வங்கதேசம் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 2 - 0 என கைப்பற்றியது. அதன் மூலம் பாகிஸ்தான் அணிக்கு எதிராக முதல் முறையாக டெஸ்ட் தொடரை வங்கதேச அணி வென்று சாதித்தது.
இந்த மாபெரும் வெற்றியை கொண்டாட முடிவு செய்த வங்கதேச கிரிக்கெட் அமைப்பு, டெஸ்ட் அணி வீரர்களுக்கு பரிசுத் தொகையை அளிக்க முடிவு செய்தது. தற்போது வங்கதேச நாட்டில் மோசமான அரசியல் சூழ்நிலை நிலவுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு போராட்டக்காரர்களால் தூக்கி எறியப்பட்டு, தற்போது ராணுவத்தின் கட்டுப்பாட்டில் நாடு உள்ளது.
வங்கதேச கிரிக்கெட் அமைப்பின் முன்னாள் தலைவர் பதவி விலகியதை அடுத்து புதிய தலைவராக ஃபரூக் அஹ்மது நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் வங்கதேச அணியின் வெற்றியை பாராட்ட முடிவு செய்த அவர், வங்கதேச டெஸ்ட் அணி வீரர்களுக்கு இந்திய மதிப்பில் ஒட்டுமொத்தமாக 2.25 கோடி ரூபாய் பரிசு பணத்தை அறிவித்தார். இது சிறிய தொகை என்றாலும் கூட வங்கதேச வீரர்களுக்கு இது மிகப்பெரிய ஊக்கமாக அமையும்.
அடுத்து இந்திய அணிக்கு எதிராகவும் வங்கதேசம் சிறப்பாக செயல்பட இது ஊக்கம் அளிக்கும் என அந்த நாட்டு ஊடகங்கள் பாராட்டி உள்ளன. தற்போது வங்கதேச வீரர்கள் சென்னையில் வந்து இறங்கி உள்ளனர். முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. செப்டம்பர் 19 அன்று முதல் டெஸ்ட் போட்டி துவங்கி நடைபெறும். இரண்டாவது போட்டி கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது. அந்த போட்டி செப்டம்பர் 27 அன்று துவங்க உள்ளது. அதன் பின் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது.
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ள வங்கதேச அணி - நஜ்முல் ஹுசைன் ஷான்டோ (கேப்டன்), மஹ்முதுல் ஹசன் ஜாய், ஜாகிர் ஹசன், ஷத்மான் இஸ்லாம், மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹீம், ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், நயீம் ஹசன், நஹித் ராணா, ஹசன் மஹ்முத், டஸ்கின் அகமது, சையத் காலித் அகமது, ஜாக்கர் அலி