கான்பூர்: இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியை காண வந்த பிரபல ரசிகரான டைகர் ராபி மீது இந்திய ரசிகர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் டைகர் ராபி அனுமதிக்கப்பட்ட நிலையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் அணி விளையாடி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், 2வது போட்டி மீண்டெழ வேண்டும் என்று வங்கதேசம் வீரர்கள் தீவிரமாக இருந்தனர். இந்த நிலையில் முதல் நாள் ஆட்டத்தில் வங்கதேசம் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 107 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், கனமழை காரணமாக ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இதனால் மோமினுல் ஹக் 40 ரன்களுடனும், முஷ்ஃபிகுர் ரஹிம் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஏற்கனவே கான்பூர் மைதானம் அமைந்துள்ள பகுதியில் நேற்றில் இருந்தே மழை பெய்து வந்ததால், டாஸ் போடுவதற்கும் தாமதம் ஏற்பட்டது. இதனிடையே வங்கதேசம் அணியின் ஆட்டத்தை பார்ப்பதற்காக அந்த அணியின் தீவிர ரசிகரான டைகர் ராபி கான்பூர் மைதானத்திற்கு வந்திருந்தார்.
வங்கதேசம் அணி விளையாடும் பெரும்பாலான போட்டிகளை டைகர் ராபி நேரில் பார்க்க வருவார். வங்கதேச கொடியிலான ஆடையை அணிந்து கொண்டு முகத்தில் மஞ்சள் பெயிண்ட் அணிந்து மைதானத்தில் போட்டிகளை பார்ப்பார். இன்றைய ஆட்டத்தில் கான்பூர் மைதானத்தில் சி ஸ்டாண்டில் அமர்ந்து டைகர் ராபி பார்த்து கொண்டிருந்தார்.
அப்போது சில இந்திய அணி ரசிகர்கள் அவரை பின்னால் இருந்து தாக்கியுள்ளனர். அவரின் அடி வயிற்றில் அதிகளவில் தாக்குதல் நடத்தப்பட்டதால், அவர் அந்த இடத்திலேயே நிலை குழைந்து விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை மீட்ட காவல்துறையினர், டைகர் ராபியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த விவகாரம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே கான்பூர் மைதானத்தில் 2வது டெஸ்ட் போட்டி நடத்தக் கூடாது என்று சில இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தினர். வங்கதேசத்தில் நடந்த உள்நாட்டு அரசியல் பிரச்சனையின் போது, இந்து கோயில்கள் மற்றும் இந்து மக்கள் மீது சிலர் தாக்குதல் நடத்தியது தெரிய வந்தது. இதுதொடர்பாக சில வீடியோக்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி சர்ச்சையானது.
இதனால் உத்தரப் பிரதேசத்தில் உள்ள இந்து அமைப்புகள் வங்கதேசம் அணி வீரர்களை கான்பூரில் விளையாட அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்து அச்சுறுத்தல் விடுத்தனர். ஆனால் பிசிசிஐ தரப்பில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு திட்டமிட்டபடி போட்டி தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் எதிர்பாராத வகையில் வங்கதேச அணியின் ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
உலகக்கோப்பை தொடரின் போதே பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது, இந்திய ரசிகர்கள் பாகிஸ்தான் வீரர்களை பார்த்து ஜெய் ஸ்ரீ ராம் என்று கூறி காழ்ப்பை வெளிப்படுத்தினர். இது இந்திய அணி ரசிகர்களுக்கும் தலைகுனிவை ஏற்படுத்தியது. தற்போது உத்தரப் பிரதேச ரசிகர்கள் வங்கதேச ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மைதானத்தின் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.