கராச்சி: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்றதை அடுத்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாஸித் அலி பாகிஸ்தான் வீரர்களை கடுமையாக விமர்சனம் செய்து பேசி இருக்கிறார். இதே வங்கதேச அணி சில நாட்களுக்கு முன் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி 2 - 0 என வெற்றி பெற்று இருந்தது.
பாகிஸ்தான் அணி தன் சொந்த மண்ணிலேயே டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஷ் செய்யப்பட்டது. அதே சமயம், இந்திய அணி அபாரமாக ஆடியதை சுட்டிக்காட்டி இருக்கும் பாஸித் அலி இந்திய வீரர்கள் பிட்ச்சை சரியாக புரிந்து கொள்கிறார்கள், இந்தியாவில் சரியான பிட்ச் அமைக்கப்படுகிறது. ஆனால், பாகிஸ்தான் வீரர்களுக்கு பிட்ச்சை குறித்த அறிவு இல்லை என அவர் பேசி இருக்கிறார்.

இது குறித்து பாஸித் அலி பேசியது இதுதான் - "முதல் டெஸ்ட் போட்டியில் பும்ரா ஐந்து விக்கெட் வீழ்த்தினார். அஸ்வின் ஆறு விக்கெட்கள் வீழ்த்தினார். ஜடேஜா ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தினார். சிராஜ் இரண்டு விக்கெட்களையும், ஆகாஷ் தீப் 2 விக்கெட்களையும் வீழ்த்தி இருக்கிறார்கள். 20 விக்கெட்களின் கணக்கு இதுதான். இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் அனைத்து விதத்திலும் சரியாக செயல்பட்டு இருக்கிறார்கள்."
"இந்தியா இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியது. ஏனெனில், பந்து நிச்சயம் திரும்பும் என்பது அவர்களுக்கு தெரிந்திருந்தது. போட்டியிலும் அதுதான் நடந்தது. அந்த வகையில் பிட்ச்சை தயாரித்தவர்களை நாம் பாராட்டியே ஆக வேண்டும். அவர்களுக்கு எப்படி ஒரு டெஸ்ட் போட்டிக்கான பிட்ச்சை உருவாக்க வேண்டும் என்பது தெரிந்து இருக்கிறது. எங்களை போல அல்ல. பாகிஸ்தானில் அது குறித்து யாருக்கும் எதுவும் தெரியாது. நான் அந்த விஷயத்தைப் பற்றி பேசப் போவதில்லை. நான் கோபத்தால் நிரம்பி இருக்கிறேன்."
"எங்கள் நாட்டில் பிட்ச்சுக்கு எந்த மதிப்பும் இல்லை. இவர்கள் படிப்பறிவு அற்றவர்கள். பெருமையுடன் கிரிக்கெட் ஆடியவர்கள் எல்லாம் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பில் இருக்கிறார்கள். ஆனாலும், பிட்ச் குறித்த அறிவு வீரர்களுக்கு இல்லை. அது தான் எனக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் எதை சொல்லிக் கொடுக்கிறீர்கள். ஒரு பிட்ச்சை குறித்து தெரிந்து கொண்டாலே 50 சதவீத சிக்கல்கள் முடிவுக்கு வந்துவிடும். சுனில் கவாஸ்கரையோ, ஜாவித் மியான்தத்தையோ கேளுங்கள். ஆனால், பாகிஸ்தானில் இது யாருக்கும் புரியாது." என்று பாஸித் அலி கூறி இருக்கிறார்.