கான்பூர்: இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி திட்டமிட்டபடி கான்பூர் மைதானத்தில் நடக்கும் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2வது டெஸ்ட் போட்டிக்கு அச்சுறுத்தல்கள் இருந்தாலும், சூழலை அதிகாரிகளுடன் இணைந்து கண்காணித்து வருவதாக பிசிசிஐ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் பங்கேற்பதற்காக வங்கதேசம் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதன்பின் 2வது டெஸ்ட் போட்டி உத்தரப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள கான்பூர் மைதானத்தில் செப்.27ஆம் தேதி தொடங்கவுள்ளது.

இதற்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்திய அணிக்கு இந்த டெஸ்ட் தொடருடன் ஹோம் சீசன் தொடங்கவுள்ள நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி முகாமில் இந்திய அணி வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். இதற்காக இன்றைய தினமே இந்திய அணி வீரர்கள் சென்னை வரவுள்ளனர். பயிற்சி முகாமிற்கு தேவையான அத்தனை ஏற்பாடுகளையும் பிசிசிஐ மேற்கொண்டுள்ளது.
அதேபோல் வங்கதேசம் அணியை பொறுத்தவரை ஸ்பின்னர்கள், வேகப்பந்துவீச்சாளர்கள் என்று சிறந்த அணியுடன் இந்திய அணிக்கு எதிராக விளையாட தயாராகியுள்ளது. ஏற்கனவே பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணிலேயே 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்று புதிய வரலாறு படைத்துள்ளது. அதேபோல் இந்திய அணியை சமாளிக்க ஷகிப் உள்ளிட்ட வீரர்கள் கவுண்டி கிரிக்கெட்டை விளையாடி வருகின்றனர்.
இதனால் பாகிஸ்தானில் தொடங்கிய வெற்றிப் பயணத்தை வங்கதேசம் அணி தொடர்வதற்கு தீவிரமாக முயற்சிப்பதாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் 2வது டெஸ்ட் போட்டி நடக்கும் மைதானம் மாற்றப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்கதேசத்தில் உள்நாட்டு அரசியல் பிரச்சனைக் காரணமாக ஆங்காங்கே கலவரம் நடந்து வருகின்றன.
அதேபோல் வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் மீதும், கோயில்கள் மீதும் தாக்குதல் நடந்து வருவதாக வீடியோக்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் கான்பூர் மைதானத்தில் நடக்கவுள்ள இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு 2வது டெஸ்ட் போட்டிக்கு இந்து மகா சபா அமைப்புகளால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
பிசிசிஐ நிர்வாகத்தை பொறுத்தவரை பாதுகாப்பு சிக்கல் இருந்தால், எந்தவித ரிஸ்கும் எடுக்காது. இதனால் கான்பூர் மைதானத்தில் 2வது டெஸ்ட் போட்டி நடக்குமா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்தது. இதுகுறித்து பிசிசிஐ நிர்வாகிகள் தரப்பில் பேசுகையில், அச்சுறுத்தல் இருப்பதால் கண்காணிப்பு அதிகாரிகளுடன் இணைந்து நாங்களும் சூழலை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். இந்தியா - வங்கதேசம் போட்டியை சிறப்பாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
இதனால் 2வது டெஸ்ட் போட்டி கான்பூர் மைதானத்தில் திட்டமிட்டபடி நடக்கும். இந்தியா மற்றும் வங்கதேசம் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள், பார்வையாளர்களை கான்பூர் மைதானத்தில் வரவேற்க தயாராக இருக்கிறோம். இதனால் கான்பூர் மைதானத்தில் இருந்து 2வது டெஸ்ட் போட்டியை மாற்றுவதற்கு எந்த வாய்ப்புகளும் கிடையாது. இருந்தாலும், கான்பூர் மைதானம் மட்டுமல்லாமல் அனைத்து மைதானங்களையும் சுற்றியுள்ள பகுதிகளையும் கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளார்.