கான்பூர்: இந்தியா மற்று வங்கதேச அணிகள் மோதி வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன்ஃபீல்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் முதல் மூன்று நாட்கள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. மூன்று நாட்களில் 35 ஓவர்கள் மட்டுமே பந்து வீசப்பட்டது. இதை அடுத்து மிக மோசமான மைதானத்தை டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணி தேர்வு செய்திருப்பதாக விமர்சனம் எழுந்தது. அதை பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா மறுத்து இருக்கிறார்.
குறிப்பாக இந்தப் போட்டியின் மூன்றாவது நாள் அன்று ஒரு சொட்டு மழை கூட பெய்யாத நிலையிலும், மழை நீர் சில இடங்களில் தேங்கி இருந்ததால், மோசமான ஆடுகளம் காரணமாக போட்டி முழுவதுமாக கைவிடப்பட்டது. இதை சுட்டிக்காட்டி பல ரசிகர்களும் பிசிசிஐ மீது விமர்சனம் செய்தனர்.

ஆனால், 80 ஆண்டுகளில் இது போல இதுவரை நடந்ததே இல்லை. இது சிறந்த மைதானம் என ராஜீவ் சுக்லா கூறி இருக்கிறார். இது குறித்து அவர் பேசுகையில், "பிசிசிஐ நிர்வாகிகளாக நாங்கள் விமர்சனங்களை சந்திப்பதற்கு பழகிவிட்டோம். ஆனால், எல்லாவற்றையும் விமர்சனம் செய்து கொண்டே இருக்கக் கூடாது. கான்பூர் மைதானத்திற்கு வேறு சில காரணங்களால் நாங்கள் போட்டிகளை ஒதுக்காமல் விட்ட போதும் விமர்சனத்திற்கு ஆளானோம். இப்போது நாங்கள் அந்த மைதானத்தில் போட்டியை நடத்தும் போதும் விமர்சனத்தை சந்திக்கிறோம். ஏன் கான்பூர் மைதானத்தில் போட்டி நடத்தினீர்கள்? என்கிறார்கள். எனவே, இதற்கு முடிவே இல்லை." என்றார்.
மேலும், "இந்த மைதானம் 80 ஆண்டுகள் பழமையானது என்பது தான் பிரச்சனையாக உள்ளது. இது பாரம்பரியமான மைதானம் ஆகும். ஒரு காலத்தில் இது நிரந்தரமாக டெஸ்ட் போட்டிகளை நடத்தும் மைதானமாக இருந்தது. இந்தியாவின் முதல் ஆறு நிரந்தர டெஸ்ட் மைதானங்களில் ஒன்றாக இது இருந்தது. கொல்கத்தா, சென்னை, டெல்லி, பெங்களூரு, மும்பை மற்றும் கான்பூர் ஆகியவையே அந்த ஆறு நிரந்தர டெஸ்ட் மைதானங்கள். எனவே, கான்பூர் நிரந்தர டெஸ்ட் மைதானம். இங்கு டெஸ்ட் போட்டிகளை நடத்த வேண்டும் என்பதே எங்கள் எண்ணம்." என்றார்.
மேலும், "இந்த மைதானத்தில் 80 ஆண்டுகளில் இப்போதுதான் முதல்முறையாக மழையால் இரண்டு நாட்கள் ஆட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. வரலாற்றின் படி பார்த்தால் கான்பூர் மைதானத்தில் இதுவரை ஒரு போட்டி கூட ரத்து செய்யப்பட்டதே இல்லை. உலகின் பல்வேறு மைதானங்களில் மழையால் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே, இரண்டு நாட்கள் ஆட்டம் மட்டும் ரத்து செய்யப்பட்டதற்கு அனைவரும் பொங்கி எழக்கூடாது." என்றார் ராஜீவ் சுக்லா.
"இந்த மைதானம் கட்டப்பட்ட போது அதிக (மழை நீர் வடிகால்) தொழில்நுட்பங்கள் இல்லை. இப்போது நிறைய தொழில்நுட்பங்கள் உள்ளன. லக்னோவில் உள்ள மைதானத்தில் அவை உள்ளன. வாரணாசியில் இப்போது கட்டப்பட்டு வரும் மைதானத்தில் மழை நீரை வெளியேற்றும் நவீன தொழில்நுட்பங்களை செயல்படுத்தி இருக்கிறோம். இங்கேயும் அதை செய்ய நாங்கள் திட்டமிட்டு இருக்கிறோம். அது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது." என்றார்.
"சில சமயம் மழை பெய்யலாம். எனவே, நாம் அனைவரும் கடவுள் இந்திரனிடம் வேண்டிக் கொள்ள வேண்டியது தான், மழை பெய்யக் கூடாது என்று. இது உலகம் முழுவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஏன் கான்பூர் மற்றும் கிரீன் பார்க் மைதானங்களை மட்டும் குறை சொல்கிறீர்கள்? இது எல்லாமே இயற்கையின் கைகளில் தான் உள்ளது." என்றார் ராஜீவ் சுக்லா.