மும்பை: வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெறும் இரண்டரை நாட்கள் மட்டுமே நடந்த போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது. அது கிரிக்கெட் உலகில் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. முன்னாள் ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டன் பிராட் ஹட்டின் ரோஹித் சர்மாவின் இந்த அணுகுமுறையை வெகுவாக பாராட்டி இருக்கிறார்.
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் 35 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. அதன் பின் மழையால் முதல் நாள் போட்டி தடைப்பட்டது. அடுத்த இரண்டு நாட்களும் மழையின் காரணமாக போட்டி நடைபெறவில்லை. பின்னர் நான்காவது மற்றும் ஐந்தாவது நாள் ஆட்டம் மட்டுமே மீதம் இருந்தது.

அந்த நிலையில், போட்டி டிராவில் முடிவடையும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், வங்கதேச அணியை விரைவாக ஆட்டமிழக்கச் செய்தது இந்திய அணி. வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 233 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அடுத்து இந்திய அணி வேகமாக ரன் சேர்க்க முடிவு செய்தது. அதற்காக டெஸ்ட் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்தது.
இந்திய அணி ஒரு ஓவருக்கு எட்டு ரன்கள் என்ற விகிதத்தில் ரன் குவித்தது. பெரும் 35 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. வங்கதேச அணியை விட 52 ரன்கள் மட்டுமே கூடுதலாக எடுத்திருந்தது இந்தியா. எனினும், அடுத்து வங்கதேச அணியை 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கியது இந்தியா.
அதன் பின் 95 ரன்கள் என்று வெற்றி இலக்கை எளிதாக எட்டி இந்தியா வென்றது. வெறும் இரண்டு நாள் ஆட்டத்தில் இந்தியா திட்டமிட்டு ஆடி வென்றது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. இது குறித்து பிராட் ஹட்டின் பேசுகையில், "ரோஹித் சர்மா ஒரு கேப்டனாக வெற்றியை தான் முதலில் நோக்குகிறார். மற்ற எல்லாமே அவருக்கு இரண்டாம் பட்சமாகவே உள்ளது." என்றார்.
மேலும், "இந்தியா எளிதாக வங்கதேச அணிக்கு எதிராக வலைப் பயிற்சியில் பேட்டிங் செய்வது போல பேட்டிங் செய்து போட்டியை டிரா ஆக்கி இருக்கலாம். அப்படி செய்து இருந்தால் யாருமே அவர்களை கேள்வி கேட்டு இருக்க மாட்டார்கள். ஆனால், ரோஹித் சர்மாவுக்கு இந்தப் போட்டியில் முடிவு வேண்டும் என்ற மனநிலை இருந்தது. அந்த வகையில் இந்திய அணியை நான் பாராட்டுகிறேன்." என்று பிராட் ஹட்டின் கூறி இருக்கிறார்.