சென்னை: இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள நிலையில், பிட்ச் ரிப்போர்ட் குறித்து அறிந்து கொள்வோம். அதேபோல் டாஸ் வெல்லும் அணி, முதலில் என்ன செய்ய வேண்டும் என்பதையும் பார்க்கலாம்.
இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 43 நாட்கள் ஓய்வுக்கு பின் இந்திய அணி வீரர்கள் களத்திற்கு திரும்பவுள்ளனர். அதேபோல் 6 மாதங்களுக்கு பின் இந்திய அணி முதல்முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் களமிறங்கவுள்ளது. நீண்ட நாட்களாக இந்திய அணியில் இருந்து வெளியில் இருந்த விராட் கோலி, ரிஷப் பண்ட், கேஎல் ராகுல் உள்ளிட்டோர் கம்பேக் கொடுத்துள்ளனர்.

அதேபோல் வங்கதேசம் அணியை பொறுத்தவரை இம்முறை இந்திய மண்ணில் வரலாறு படைக்க வேண்டும் என்று தீவிரம் காட்டி வருகிறது. ஏனென்றால் பாகிஸ்தான் மண்ணில் அந்த அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரை 2-0 என்ற கைப்பற்றியதன் மூலமாக, புதிய வரலாறு படைத்தது. இதனால் இந்திய மண்ணிலும் புதிய வரலாறு படைக்க வேண்டும் என்று வங்கதேசம் வீரர்கள் சிறப்பாக தயாராகியுள்ளனர்.
வங்கதேசம் அணியை பொறுத்தவரை முதல்முறையாக இந்திய அணிக்கு எதிராக தான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தொடங்கியது. இதுவரை இந்திய அணிக்கு எதிராக 13 போட்டிகளில் வங்கதேசம் விளையாடியுள்ள நிலையில், 11ல் இந்திய அணி வென்றுள்ளது. மீதமுள்ள 2 போட்டிகள் மழை காரணமாக கைவிடப்பட்ட போட்டியாகும்.
இதனால் இந்திய அணியை வங்கதேசம் இதுவரை ஒருமுறை கூட டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்தியதில்லை. அதேபோல் இந்திய அணியை பொறுத்தவரை சொந்த மண்ணில் 17 டெஸ்ட் தொடர்களை தொடர்ச்சியாக வென்று வரலாறு படைத்திருக்கிறது. இதனால் வங்கதேசம் அணியால் இந்திய அணிக்கு சவால் அளிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இருந்தாலும் வங்கதேசம் அணியின் நிஹாத் ரானா, மெஹதி ஹசன் மிராஸ், டைஜுல் இஸ்லாம், ஜாகிர் ஹசன், ஷத்மன் இஸ்லாம் உள்ளிட்ட இளம் வீரர்கள் பலரும் சிறப்பாக செயல்பட தொடங்கியுள்ளனர். அதேபோல் கேப்டன் ஷான்டோவும் அந்த அணி வீரர்களை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். இதனால் இந்திய அணியால் வங்கதேசத்தை எளிதாக வீழ்த்த முடியாது என்று பார்க்கப்படுகிறது.
சேப்பாக்கம் மைதானத்தை பொறுத்தவரை சிவப்பு மணலால் அமைக்கப்பட்ட பிட்சில் தான் போட்டி நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிட்சில் சில புற்கள் இருந்தாலும், போட்டிக்கு முன்பாகவே அவை வெட்டப்படும் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் சேப்பாக்கம் பிட்சில் தொடக்கத்தில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு நிச்சயம் நல்ல பவுன்ஸ் கிடைக்கும்.
அதேபோல் சென்னை வானிலையை பொறுத்தவரை கடுமையான வெயில் இருப்பதால், விரைவாகவே ஸ்பின்னர்களுக்கு பிட்சில் இருந்து உதவி கிடைக்கும் என்று பார்க்கப்படுகிறது. ஆனால் பாரம்பரியமாக சேப்பாக்கம் பிட்சில் நல்ல பேட்ஸ்மேன்களால் முதல் 3 நாட்களுக்கு சிறப்பாக பேட்டிங் செய்ய முடியும். கடைசி 2 நாட்களில் பிட்சில் வெடிப்பு ஏற்பட்டு, ஸ்பின்னர்கள் எழுச்சி பெறுவார்கள்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி அப்படிதான் நடந்தது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கை செய்ய வேண்டும் என்று பார்க்கப்படுகிறது. டாஸ் வென்று பேட்டிங் ஆடினால் முதல் நாள் பிட்சில் நன்றாக பந்து பேட்டிற்கு வரும். அதேபோல் சேப்பாக்கம் பிட்சில் 150 ரன்களை சேஸிங் செய்வதே சிரமமான விஷயம் என்பதால், டாஸ் வென்று பேட்டிங் செய்வதே சரியான முடிவாக பார்க்கப்படுகிறது.