துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோத உள்ள போட்டிக்கு முன்னதாக, வங்கதேச ரசிகர்கள் மத்தியில் ஒரு வித எதிர்பார்ப்பு நிலவுகிறது. சமீப காலமாக இந்தியா மற்றும் வங்கதேச நாடுகளுக்கு இடையிலான அரசியல் உறவில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. வங்கதேச நாட்டின் முன்னாள் அதிபர் ஷேக் ஹசினா இந்தியாவில் தஞ்சம் அடைந்ததாக வெளியான செய்திகளால் வங்கதேச நாட்டில் இந்தியாவுக்கு எதிரான மனநிலை உருவானது. அது பல்வேறு வடிவங்களை எடுத்தது.
இதற்கிடையே, 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் வங்கதேச வீரர்கள் மறைமுகமாக புறக்கணிக்கப்பட்டனர். சில வீரர்கள் ஏலத்தில் பங்கேற்ற போதும் எந்த அணியும் அவர்களை வாங்கவில்லை. 2024 ஐபிஎல் தொடரில் வங்கதேச வீரர்கள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன் தங்கள் நாட்டுக்கு அழைக்கப்பட்டனர். அதனால்தான் ஏலத்தில் வங்கதேச வீரர்களை வாங்கவில்லை என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது. அரசியல் காரணமாக வாங்கவில்லை என்ற மற்றொரு பார்வையும் பேசப்படுகிறது.

இந்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவை எதிரி அணியாகவே வங்கதேச வீரர்கள் பாவிப்பார்கள் என்ற ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. அதற்கேற்ப, வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹுசைன் சாண்டோ எந்த ஒரு அணியையும் தங்களால் வீழ்த்த முடியும் என பேசியிருக்கிறார். அது நேர்மறையாகச் சொல்லப்பட்ட ஒரு விஷயமாக இருந்தாலும், வங்கதேச ரசிகர்கள் இந்தியாவை வீழ்த்த வேண்டும் என்ற வெறியுடன் இருக்கிறார்கள்.
இதுவரை சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா மற்றும் வங்கதேசம் ஒரு முறை மட்டுமே மோதி உள்ளன. அதில் இந்தியா வெற்றி பெற்று இருக்கிறது. ஒருநாள் போட்டி உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை குரூப் சுற்றில் வங்கதேச அணி வீழ்த்தி இருந்தது. வங்கதேச கிரிக்கெட்டில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த போட்டியும் அதுதான்.
இந்திய கிரிக்கெட்டில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தி, மிகப் பெரிய மாற்றத்திற்கு வித்திட்ட சம்பவமும் அதுதான். அதன் பின்னரே அப்போதைய பயிற்சியாளர் கிரேக் சேப்பல் வெளியேற்றப்பட்டு தோனி டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதனால் வங்கதேச அணி அவ்வப்போது இந்திய கிரிக்கெட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு அணியாக உள்ளது.
ஆனால், தற்போது வங்கதேசம் வலுவான அணியாக இல்லை. அந்த அணியின் மூத்த வீரர் ஷகிப் அல் ஹசன் தற்போது அணியில் இடம் பெறவில்லை. இந்த சூழ்நிலையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வங்கதேசத்தை எளிதாக வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் வங்கதேச ரசிகர்கள் இந்தப் போட்டியின் போது ஆக்ரோஷமாக இருப்பார்கள். வங்கதேச வீரர்கள் கூட இந்திய வீரர்களை சீண்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.