சென்னை: இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் ஆடி வரும் முதல் டெஸ்ட் போட்டி கிட்டத்தட்ட முடிவை நெருங்கி இருக்கும் நிலையில் மழையால் இந்த போட்டிக்கு பாதிப்பு ஏற்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. எனினும், போட்டியின் முடிவு பெரிய அளவில் பாதிக்கப்படாது எனவும் கூறப்படுகிறது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்க்ஸில் இந்திய அணி 376 ரன்கள் சேர்த்தது. அடுத்து முதல் இன்னிங்ஸ் ஆடிய வங்கதேச அணி 149 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸ் முடிவிலேயே 227 ரன்கள் முன்னிலை பெற்றது.

அடுத்து இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. வங்கதேச அணிக்கு 515 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்து உள்ளது.
அந்த அணியின் வெற்றிக்கு இன்னும் 357 ரன்கள் தேவை. இந்த நிலையில் நான்காவது நாள் மற்றும் ஐந்தாவது நாள் ஆட்டத்தின் இடையே மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கை வெளியாகி உள்ளது. ஆனால், அது பெரிய மழையாக இருக்க வாய்ப்பு இல்லை, லேசான தூறல் மட்டுமே இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இரண்டாம் நாள் ஆட்டத்துக்கு பிறகும், மூன்றாம் நாள் ஆட்டத்துக்குப் பிறகும் இரவில் சேப்பாக்கம் மைதானத்தில் மழை பெய்தது. ஆனால், ஆடுகளத்தின் எந்த பகுதியும் அதனால் பாதிக்கப்படவில்லை. இரவில் மழை பெய்த பின் மறுநாட்களில் போட்டி வழக்கம் போல நடைபெற்றது. நான்காவது நாளில் போட்டியின் இடையே லேசான மழை பெய்தாலும் கூட அதனால் சில நிமிடங்கள் மட்டுமே போட்டி தடைபடும் என கூறப்படுகிறது.
சேப்பாக்கம் மைதானத்தில் மழை நீர் வடிகால் வசதிகள் மிகவும் சிறப்பாக இருப்பதால் மழை பெய்தாலும் அடுத்த சில நிமிடங்களில் மழைநீர் வடிந்து சென்றுவிடும். அதனால் இந்த போட்டியில் எந்த பாதிப்பும் ஏற்படாது. வங்கதேச அணி மழையையும் நம்ப முடியாத இக்கட்டான நிலையில் உள்ளது. அதே சமயம் அந்த அணியின் கைகளில் 6 விக்கெட்கள் உள்ளன. ஏற்கனவே, பாகிஸ்தான் அணிக்கு எதிராக இதுபோல அதிக விக்கெட் வீழ்ந்த பின்னரும் வங்கதேச அணி 525 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி கவனமாக இருக்க வேண்டிய அவசியமும் உள்ளது.
இந்திய அணியில் முதல் இன்னிங்ஸில் வேகப் பந்துவீச்சாளர்களே ஆதிக்கம் செலுத்தினர். முதல் இன்னிங்ஸில் பும்ரா 4 விக்கெட்களும், சிராஜ் 2 விக்கெட்களும், ஆகாஷ் தீப் 2 விக்கெட்களும் வீழ்த்தினர். இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் மட்டுமே 8 விக்கெட்களை வீழ்த்தினர். சுழற் பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். அஸ்வினுக்கு முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட் கூட கிடைக்கவில்லை. ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் அஸ்வின் 3 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். நான்காவது நாள் அன்று அவர் மேலும் விக்கெட்களை வீழ்த்துவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.