சென்னை: இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சுப்மன் கில் அரை சதம் அடித்தார். அவர் இரண்டு சிக்ஸர்களை அதிரடியாக அடித்து அரை சதம் கடந்தார். இதை அடுத்து இந்திய அணி 350 ரன்களுக்கும் அதிகமாக முன்னிலை பெற்றது.
சுப்மன் கில்லுடன் ஒத்துழைத்து ஆடிய ரிஷப் பண்ட்டும் அரை சதம் அடித்தார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 376 ரன்கள் குவித்தது. அடுத்த ஆடிய வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 149 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 227 ரன்கள் முன்னிலை பெற்றது. அடுத்து இரண்டாவது இன்னிங்ஸ் ஆடத் துவங்கிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா மோசமான துவக்கம் அளித்தனர். ஜெய்ஸ்வால் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். ரோஹித் சர்மா 5 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
விராட் கோலி 17 ரன்களுடன் நடையை கட்டினார். இந்திய அணி 67 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்து ஆடினர். முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் முதல் ஆறு பேட்ஸ்மேன்களில் 5 பேட்ஸ்மேன்கள் சொதப்பியதைப் போல மீண்டும் நடக்குமோ? என்ற அச்சம் இருந்தது.
எனினும், சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் அபாரமாக ஆடினர். சுப்மன் கில் சிக்ஸ் அடித்து தனது அரை சதத்தை நிறைவு செய்தார். அதன் மூலம் தன் மீதான விமர்சனத்திற்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்தார். மறுபுறம் அதிரடி ஆட்டம் ஆடிய ரிஷப் பண்ட் அரை சதம் அடித்தார். இதை அடுத்து இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 150 ரன்களை தாண்டி ரன் குவித்தது. அதன் பின் வங்கதேச அணியின் பந்துவீச்சாளர்களால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. ரிஷப் பண்ட் பவுண்டரிகளின் எண்ணிக்கையை கூட்டி சதம் அடித்து 109 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.
மறுபுறம் தரமான இன்னிங்க்ஸ் ஆடிய சுப்மன் கில் தனது ஐந்தாவது டெஸ்ட் போட்டி சதத்தை கடந்தார். 3 சிக்ஸ், 9 ஃபோர் உடன் அவர் சதம் கடந்தார். முதல் இன்னிங்க்ஸில் டக் அவுட் ஆன சுப்மன் கில் இரண்டாவது இன்னிங்க்ஸில் சதம் அடித்து வங்கதேச அணியை நிலைகுலைய வைத்தார்.