துபாய்: சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி தங்களுடைய முதல் லீக் ஆட்டத்தில் வங்கதேசத்தில் எதிர்கொள்கிறது. துபாயில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் நஜ்முல் சாண்டோ, முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இந்த தொடருக்காக தாங்கள் சிறப்பான முறையில் தயாராகி வருகின்றோம். கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக நாங்கள் ஒருநாள் போட்டியில் விளையாடிய போது தொடரை வென்றோம்.

இதனால் எங்கள் அணி வீரர்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். முதலில் பேட்டிங் செய்வதால் அதிக அளவு ரன்கள் குவிக்க வேண்டும் என நினைக்கின்றேன். எங்கள் அணியில் மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள், இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் இடம்பெற்று இருக்கிறார்கள் என சாண்டோ கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நாங்களும் முதலில் பந்து வீச தான் இருந்தோம்.
இதனால் டாஸ் குறித்து கவலை இல்லை. துபாயில் சில ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் இங்கு விளையாடி இருக்கிறோம். அப்போது இரவு நேரத்தில் பேட்டிங்கிற்கு சாதகமாக ஆடுகளம் மாறும் என நினைக்கின்றேன். எனவே இன்றைய ஆட்டத்தில் நாங்கள் சேஸ் செய்ய விரும்புகிறோம்.
எங்கள் அணியில் அனைத்து வீரர்களும் நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறார்கள். சாம்பியன்ஸ் கோப்பை தொடர் என்பது ஒரு நாக் அவுட் போட்டி போல ஆகும். எனவே ஒவ்வொரு போட்டியிலும் நாம் சிறப்பாக செயல்பட வேண்டும். நாங்கள் எதையும் திரும்பி பார்க்கவில்லை. அனைத்தையும் புதிய தொடக்கமாக நினைக்கின்றோம்.
இந்த தொடரில் ஒவ்வொரு ஆட்டமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இன்றைய ஆட்டத்தில் வருண் சக்கரவர்த்தி, ஆர்ஸ்தீப் சிங் ஆகியோர் இடம்பெறவில்லை. அவர்களுக்கு பதிலாக ஜடேஜா, முஹம்மது ஷமி ஆகியோர் அணிக்கு திரும்பி இருக்கிறார்கள். இன்றைய ஆட்டத்தில் மூன்றாவது சுழற் பந்துவீச்சாளராக குல்தீப் விளையாடுகிறார் என ரோகித் சர்மா கூறியுள்ளார். இதன் மூலம் ஆர்ஸ்தீப் சிங்கிற்கு வாய்ப்பு வழங்கப்படாமல் ஹர்ஷித்ராணாவுக்கு கம்பீர் ரோகித் கூட்டணி வாய்ப்பு வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.