கான்பூர்: இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் ஆடி வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டரை நாள் ஆட்டம் மழையால் தடைபட்ட நிலையில், கடைசி இரண்டு நாட்கள் ஆட்டம் மட்டுமே நடைபெற உள்ளது. அதனால் போட்டியில் முடிவு எட்டப்படாது, போட்டி டிராவில் முடிவடைய வாய்ப்பு அதிகமாக உள்ளதாக எதிர்பார்க்கப்படும் நிலையில், அம்பயர்கள் சில முடிவுகளை எடுத்து உள்ளனர்.
கடைசி இரண்டு நாட்கள் ஆட்டத்துக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி உள்ளனர் அம்பயர்கள். டெஸ்ட் போட்டியின் ஒரு நாளில் குறைந்தபட்சம் 90 ஓவர்கள் வீசப்பட வேண்டும். ஆனால், இந்தப் போட்டியில் இரண்டரை நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டு இருப்பதால் கடைசி இரண்டு நாட்களில், ஒவ்வொரு நாளிலும் 98 ஓவர்கள் வீசப்பட முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் இந்தப் போட்டியில் முடிவு எட்டப்பட ஓரளவு வாய்ப்பு உள்ளது. இந்திய அணியே இந்தப் போட்டியில் வெற்றி பெறும் என கருதப்படுவதால் இது இந்திய அணிக்கு சாதகமான முடிவாக பார்க்கப்படுகிறது.

மேலும், 9.30 மணி முதல் 4.30 மணி வரையில் நடக்க வேண்டிய ஒரு நாள் ஆட்டத்தில் 30 நிமிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு இருக்கிறது. கான்பூர் டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் மற்றும் ஐந்தாவது நாள் ஆட்டம் 9.30 மணி முதல் மாலை மணி வரை நடைபெறும் என அம்பயர்கள் அறிவித்து உள்ளனர்.
அதற்கேற்ப போட்டியின் இடைவேளையிலும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. காலை 9.30 மணி முதல் 11.45 வரை முதல் பகுதி ஆட்டம் நடைபெறும். பின்னர் மதிய இடைவேளை விடப்படும். அடுத்து மதியம் 12.25 முதல் 2.40 வரை இரண்டாவது பகுதி ஆட்டம் நடைபெறும். பின்னர் தேநீர் இடைவேளை விடப்படும்.
மதியம் 3 மணி முதல் 5 மணி வரை மூன்றாவது மற்றும் கடைசி பகுதி ஆட்டம் நடைபெறும். அத்துடன் அந்த நாள் முடிவுக்கு வரும். இவ்வாறு அம்பயர்கள் கூடுதல் ஓவர்கள் மற்றும் கூடுதல் நேரத்தை திட்டமிட்டு உள்ளனர். இந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 35 ஓவர்கள் பேட்டிங் செய்து 3 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் சேர்த்து இருந்தது.
அடுத்த இரண்டு நாள் ஆட்டம் நடைபெறாத நிலையில், நான்காவது நாளில் தொடர்ந்து பேட்டிங் செய்து வருகிறது. பும்ரா வங்கதேச அணியின் 4வது விக்கெட்டை வீழ்த்தினார். முகமது சிராஜ் 5 வது விக்கெட்டை வீழ்த்தினார். வங்கதேச அணி 5 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து பேட்டிங் செய்து வருகிறது.