பெங்களூர்: துலீப் டிராபி தொடரில் இந்தியா ஏ அணிக்காக விளையாடி வரும் இளம் விக்கெட் கீப்பர் துருவ் ஜுரெல் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருப்பது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியின் அடுத்த முக்கிய வீரராக வருவார் என்று பார்க்கப்பட்ட துருவ் ஜுரெல், கிடைத்த வாய்ப்பை வீணடித்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான இளம் விக்கெட் கீப்பர் துருவ் ஜுரெல் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிலும் முக்கியமான நேரத்தில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய துருவ் ஜுரெல், ஆட்டநாயகன் விருதையும் வென்று அசத்தினார். இதன் மூலமாக ரிஷப் பண்ட்-க்கு மாற்றாக ஒரு விக்கெட் கீப்பரை இந்திய அணி அடையாளம் கண்டுவிட்டதாக பார்க்கப்பட்டது.

ஸ்பின்னர்கள், வேகப்பந்துவீச்சாளர்கள் என்று இரு தரப்பு பவுலர்களையும் சிறப்பாக எதிர்கொண்ட துருவ் ஜுரெல், ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக செயல்பட்டார். இருந்தாலும் இந்திய அணியின் ஹோம் சீசன் தொடங்கவுள்ள நிலையில், ரிஷப் பண்ட் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் பேக் அப் விக்கெட் கீப்பராக கேஎல் ராகுல் அல்லது துருவ் ஜுரெல் இருவரில் ஒருவருக்கான வாய்ப்பு கிடைக்கும்.
ஏனென்றால் தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக கேஎல் ராகுல் தான் செயல்பட்டிருந்தார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் கேஎல் ராகுல் காயம் காரணமாக விலகியதன் காரணமாகவே துருவ் ஜுரெல் இந்திய அணிக்குள் கொண்டு வரப்பட்டார். இதனால் வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பிடிக்க துலீப் டிராபியில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு ஜுரெலுக்கு இருந்தது.
இந்த நிலையில் இந்தியா ஏ அணியில் துருவ் ஜுரெல் தேர்வு செய்யப்பட்டார். இந்தியா பி அணிக்கு எதிரான போட்டியில் துருவ் ஜுரெல் விக்கெட் கீப்பராக களமிறங்கினார். இதில் முதல் இன்னிங்ஸில் 2 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிய துருவ் ஜுரெல், 2வது இன்னிங்ஸில் டக் அவுட்டாகி ஏமாற்றினார். இதனால் துருவ் ஜுரெல் கையில் கிடைத்த வாய்ப்பை தவறவிட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஏனென்றால் இந்திய பி அணிக்காக ஆடிய ரிஷப் பண்ட் அதிரடியாக தனது ஸ்டைலில் 34 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தியுள்ளார். தனது பேட்டிங் ஃபார்மை தேர்வு குழுவினருக்கு நிரூபித்துள்ளார். அதேபோல் கேஎல் ராகுல் தன்னுடைய டிஃபென்ஸ் எவ்வளவு வலிமையானதாக உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள், ஸ்பின்னர்கள் ஆகியோரை சிறப்பாக எதிர்கொண்டதோடு, தொடக்க வீரராக அல்லாமல் நம்பர் 4ல் களமிறங்கியது தான் முக்கியமான விஷயம். ஏனென்றால் தென்னாப்பிரிக்கா தொடரிலேயே மிடில் ஆர்டரில் தான் கேஎல் ராகுல் களமிறங்கி சதம் விளாசினார். இதனால் மிடில் ஆர்டரில் இடத்தை தக்க வைக்க கேஎல் ராகுல் முயற்சிப்பதாக பார்க்கப்படுகிறது.
இப்படியான நேரத்தில் இரு இன்னிங்ஸ்களில் துருவ் ஜுரெல் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருக்கிறார். இருந்தாலும் விக்கெட் கீப்பிங்கில் மட்டும் துருவ் ஜுரெல் துலீப் டிராபியில் ஒரே போட்டியில் அதிக கேட்ச்களை பிடித்த தோனியின் சாதனையை சமன் செய்துள்ளார். இதனால் வரும் போட்டிகளில் விக்கெட் கீப்பிங் திறமையுடன் பேட்டிங் திறமையையும் நிரூபிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.