கான்பூர்: இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் நாள் ஆட்டம் 35 ஓவர்களை வீசிய நிலையில் பெய்த கனமழை காரணமாக முடிவுக்கு வந்துள்ளது. வங்கதேசம் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 107 ரன்கள் சேர்த்து களத்தில் உள்ள நிலையில், ஆட்டம் முடிவுக்கு வந்ததால் இந்திய அணி ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கான்பூர் மைதானத்தில் தொடங்கியுள்ளது. கான்பூர் மைதானம் அமைந்துள்ள பகுதியில் அதிகாலையிலேயே கனமழை பெய்ததால், அதன் ஈரம் காயவில்லை. இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக டாஸ் போடுவதற்கு தாமதம் ஏற்பட்டது. பின்னர் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பவுலிங்கை தேர்வு செய்தார்.

கனமழை காரணமாக வேகப்பந்துவீச்சாளர்களுக்கு உதவி கிடைக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பார்க்கப்பட்டது. பின்னர் வங்கதேசம் அணியின் ஜாகிர் ஹசன் - ஷத்மான் இஸ்லாம் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்திய அணி தரப்பில் பும்ரா முதல் ஓவரை வீசினார். ஜாகிர் ஹசன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், ஷத்மான் இஸ்லாம் பவுண்டரிகளாக விளாசி வந்தார்.
இந்த நிலையில் ஆகாஷ் தீப் வீசிய 9வது ஓவரில் ஜாகிர் ஹசன் 24 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகி வெளியேறினார். பின்னர் மற்றொரு தொடக்க ஷத்மான் இஸ்லாமும் 26 ரன்களில் வெளியேற, கேப்டன் ஷான்டோ - மோமினுல் ஹக் இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இதனால் வங்கதேசம் அணியின் ஸ்கோரும் வேகமாக உயர்ந்தது.
3வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்கப்பட்ட நிலையில், அஸ்வின் பவுலிங்கில் கேப்டன் ஷான்டோ 31 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் மோமினுல் - முஷ்ஃபிகுர் ரஹிம் இருவரும் வங்கதேசம் அணியின் ஸ்கோரை 100 ரன்களை கடந்து கொண்டு சென்றனர். 35 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் சேர்த்திருந்தது.
அப்போது போதிய வெளிச்சம் இல்லாமல் இருந்தது. மைதானத்தில் லைட்கள் போடப்பட்டும், நடுவர்கள் ஸ்பின்னர்கள் மட்டுமே பவுலிங் செய்யலாம் என்று கூறினர். இதனை ஏற்காத ரோஹித் சர்மா, வேகப்பந்துவீச்சாளர்களையே பயன்படுத்துவோம் என்று தீர்மானமாக இருந்தார். இதனால் வங்கதேச பேட்ஸ்மேன்கள் இருவரும் களத்தில் இருந்து நடந்து ஓய்வறை சென்றனர்.
இதனைத் தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மைதானத்தை முழுமையாக தார்பாய் கொண்டு மூடப்பட்டது. பின்னர் சில நிமிடங்களிலேயே கனமழை தொடங்கியது. 15 நிமிடங்களில் மழை தீவிரமடைந்ததால், முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வருவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதனால் இந்திய ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.