மும்பை: இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ரிஷப் பண்ட் இருக்கும் போது, ஆட்டத்தின் அச்சாணி அவரிடமே இருக்கும் என்று முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார். டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டை விடவும் ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் கூடுதல் கன்சிஸ்டன்சியுடன் விளையாடுவார் என்பதால் எதிரணிகள் வரும் நாட்களில் அஞ்சுவார்கள் என்று கூறியுள்ளார்.
632 நாட்களுக்கு பின் வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் களமிறங்கினார். டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஏற்கனவே ரிஷப் பண்ட் விளையாடி இருந்தாலும், டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடுவதற்கு கூடுதல் எனர்ஜி மற்றும் ஃபிட்னஸ் தேவைப்பட்டது.

இதனால் ரிஷப் பண்ட் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸிலேயே ரிஷப் பண்ட் 39 ரன்களும், 2வது இன்னிங்ஸில் அதிரடியாக 109 ரன்களும் விளாசி அசத்தினார். இதன் மூலமாக கம்பேக் போட்டியிலேயே சதம் அடித்து பல்வேறு அணிகளுக்கும் எச்சரிக்கை கொடுத்துள்ளார்.
அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் விளாசிய இந்திய விக்கெட் கீப்பர்களில் தோனியின் சாதனையை சமன் செய்தார். இதனால் வரும் போட்டிகளிலும் ரிஷப் பண்ட் பேட்டிங்கில் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா பேசுகையில், இனி வரும் காலங்களில் ஒவ்வொரு அணிகளும் ரிஷப் பண்ட்-க்கு அஞ்சுவார்கள் என்று நினைக்கிறேன்.
அதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் கன்சிஸ்டன்சி வேறு லெவலில் உள்ளது. ஒவ்வொரு முறையும் ரிஷப் பண்ட் களமிறங்கிய சில நிமிடங்களிலேயே அவரின் விக்கெட்டை கைப்பற்ற முயற்சிக்க வேண்டும். இல்லையென்றால் ஒரு மணி நேரத்திற்கு பின் அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களையும் ஓடவிடுவார் என்பது நிச்சயம்.
இந்திய அணி விராட் கோலி மற்றும் சுப்மன் கில்லை ஒப்பிடும் போது, பண்ட் கன்சிஸ்டன்சி குறைவு தான். ஆனால் ஒரேயொரு செஷனில் ஆட்டத்தை மாற்றக் கூடிய வீரராக ரிஷப் பண்ட் இருப்பதால், எதிரணி வீரர்கள் நிச்சயம் அதிகமாக அச்சம் கொள்வார்கள். விராட் கோலி, சுப்மன் கில் போன்ற வீரர்களின் மீது பயம் இருக்கும்.
ஆனால் அது வேறு மாதிரியானது. விராட் கோலி போன்ற வீரர்களுடனான போட்டியில் சரிக்கு சமமாக இருக்கும். ஆனால் ரிஷப் பண்ட் பிளேயிங் லெவனில் இருக்கும் போது, அவர் கைகளில் தான் ஆட்டத்தின் அச்சாணியே இருக்கும் என்று தெரிவித்துள்ளார். அடுத்ததாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் வருவதால், ரிஷப் பண்ட் பேட்டிங் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. ஏனென்றால் 12 டெஸ்ட் இன்னிங்ஸில் மொத்தமாக 624 ரன்களை விளாசி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.