மும்பை: வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் நட்சத்திர வீரரான ருதுராஜ் கெய்க்வாட் புறக்கணிக்கப்பட்டிருப்பது ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இராணி கோப்பை தொடரில் விளையாடினாலும், அவரால் கடைசி 2 டி20 போட்டிகளில் எளிதாக விளையாட முடியும்.
வங்கதேசம் டி20 தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த இந்திய அணியில் இளம் வீரர்களான அபிஷேக் சர்மா, ரியான் பராக், நிதிஷ் குமார் ரெட்டி, ஜித்தேஷ் சர்மா உள்ளிட்டோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஐபிஎல் தொடரில் அசத்தலாக செயல்பட்ட ஹர்சித் ராணா, மயங்க் யாதவ், வருண் சக்கரவர்த்தி உள்ளிட்ட வீரர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் அணியில் விளையாடி வரும் வீரர்கள் அனைவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இளம் நட்சத்திர வீரர்களான சுப்மன் கில் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு மாற்றாக அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் தொடக்க வீரர்களாக தேர்வாகியுள்ளனர்.
இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் ஜிம்பாப்பே டி20 தொடரில் மிகச்சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட்-க்கு டி20 தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை. 2023ஆம் ஆண்டு மட்டும் டி20 கிரிக்கெட்டில் 60.8 பேட்டிங் சராசரியுடன் மொத்தமாக 365 ரன்களை விளாசி இருக்கிறார். அதேபோல் நடப்பாண்டில் 66.5 சராசரியுடன் 133 ரன்களை ருதுராஜ் கெய்க்வாட் விளாசி இருக்கிறார்.
அக்.1 முதல் அக்.5 வரை இராணி கோப்பையில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால் வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட்-ல் விளையாட முடியாது. ஆனால் அக்.9 மற்றும் அக்.12 ஆகிய தேதிகளில் நடக்கவுள்ள 2வது மற்றும் 3வது டி20 போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட்-ல் விளையாட முடியும்.
இருப்பினும் ருதுராஜ் கெய்க்வாட் தேர்வு செய்யப்படவில்லை. முதல் நிலை தொடக்க வீரர்கள் இந்திய அணியில் தேர்வு செய்யப்படாத நிலையிலும், ருதுராஜ்-க்கு வாய்ப்பு வழங்கப்படாதது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக 5 சீசன்களில் மிகச்சிறப்பாக விளையாடிய போதும், அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படாதது கூடுதல் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ருதுராஜ் கெய்க்வாட் மட்டுமல்லாமல் இந்திய அணிக்காக ஆடிய இஷான் கிஷன் மற்றும் சாஹல் இருவருக்கும் டி20 தொடரில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த சாஹல், அதன்பின் இந்திய அணியில் தேர்வு செய்யப்படாதது ஏன் என்பது குறித்தும் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.