சென்னை: இந்தியா இன்னும் சில தினங்களில் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இரண்டு போட்டிகள் கொண்ட அந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சேப்பாக்கத்தில் நடக்க உள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க இருப்பதாலேயே அது இந்திய அணிக்கு சிக்கல் ஆகவும் மாறி இருக்கிறது.
வங்கதேச அணி இதற்கு முன் இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் ஒரு வெற்றி கூட பெற்றது இல்லை. அதனால், இந்திய அணி இந்தத் தொடரில் எளிதாக வெற்றி பெற்று விடும் என்ற எண்ணம் முன்பு இருந்தது. ஆனால், வங்கதேச அணி பாகிஸ்தான் மண்ணிலேயே பாகிஸ்தான் அணியை வீழ்த்தி உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்ற வங்கதேசம் அந்த 2 - 0 என தொடரைக் கைப்பற்றி வென்றுள்ளது.

இதற்கு முன் வங்கதேசம் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெற்றி பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வங்கதேச நாட்டில் அரசியல் சூழ்நிலைகள் மிக மோசமாக இருக்கும் நிலையில் அந்த அணியின் வீரர்கள் கடும் அழுத்தத்துக்கு நடுவே பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்று உள்ளனர். அங்கிருத்து நேராக இந்தியாவுக்கு வர உள்ளனர்
வங்கதேசம் சுழற் பந்துவீச்சில் மிகவும் அனுபவம் மிக்க வீரர்களை கொண்ட அணியாக உள்ளது. ஷகிப் அல் ஹசன் மற்றும் மெஹிதி ஹாசன் மிராஸ் ஆகிய இருவரும் சுழற் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அத்துடன் தற்போது வங்கதேச அணியும் வேகப் பந்துவீச்சில் சர்வதேச அளவில் முத்திரை பதிக்க தொடங்கிவிட்டது. பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை வங்கதேசம் வெல்ல முக்கிய காரணமே அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் தான்.
இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானம் இயல்பாகவே சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான ஒன்று. அந்த வகையில் வங்கதேச அணியின் ஷகிப் அல் ஹசன் மற்றும் மெஹிதி ஹாசன் மிராஸ் இந்திய அணிக்கு எதிராக ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு உள்ளது.
சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய பேட்ஸ்மேன்கள் சுழற் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்களை பறிகொடுத்தனர். அந்த ஒருநாள் தொடரையும் இழந்து இருந்தது இந்தியா. எனவே, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் வங்கதேச அணியின் சுழற் பந்துவீச்சுக்கு எதிராக எப்படி செயல்படுவார்கள்? என்ற சந்தேகம் உள்ளது. எனவே, சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள முதல் டெஸ்ட் போட்டி இந்திய அணிக்கு பெரும் சவாலாகவே இருக்கும்.
வங்கதேச அணி பாகிஸ்தானை வீழ்த்திய நம்பிக்கையுடன் இந்திய அணிக்கு எதிராக விளையாட உள்ளதால் இந்திய அணி முதல் போட்டியில் கவனமாக இருக்க வேண்டிய அவசியமும் உள்ளது. இப்போது இருக்கும் இந்திய பேட்ஸ்மேன்கள் உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் அதிக அளவில் ஆடாததால் தான் சுழற் பந்துவீச்சை சமாளித்து ஆட சிரமப்படுகிறார்கள் என முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.