சென்னை: இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் ஆடி வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாம் நாள் ஆட்டத்தில் மட்டும் 17 விக்கெட்கள் வீழ்ந்தன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் ஒரே நாளில் 17 விக்கெட்கள் வீழ்ந்தது புதிய சாதனையாக மாறி உள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் இதற்குமுன் ஒரே நாளில் அதிகபட்சமாக 15 விக்கெட் வீழ்ந்துள்ளன.
ஆனால், அதை தாண்டி இந்த முறை ஒரே நாளில் 17 விக்கெட்கள் வீழ்ந்தன. முதல் நாள் ஆட்டத்தில் 6 விக்கெட்கள் மட்டுமே வீழ்ந்த நிலையில், இரண்டாவது நாளில் அதிக விக்கெட்கள் வீழ்ச்சி அடைந்து இருக்கிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 338 ரன்களை எடுத்து 6 விக்கெட்களை இழந்து இருந்தது. இரண்டாம் நாள் ஆட்டம் துவங்கியவுடன் ஜடேஜா, அஸ்வின், ஆகாஷ் தீப், பும்ரா வரிசையாக விக்கெட்களை இழந்தனர்.

இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 376 ரன்கள் எடுத்தது. அடுத்து வங்கதேசம் முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங் செய்தது. அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் ஒருவர் கூட நிலைத்து நின்று ஆடவில்லை. அந்த அணி 149 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பும்ரா 4 விக்கெட்களும், ஜடேஜா, ஆகாஷ் தீப் மற்றும் முகமது சிராஜ் தலா 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.
அடுத்து இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் ஆடியது. அப்போது ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி தங்களின் விக்கெட்களை இழந்தனர். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 81 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து இருந்தது. இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி முதல் இன்னிங்க்ஸின் கடைசி 4 விக்கெட்களையும், இரண்டாவது இன்னிங்க்ஸின் முதல் 3 விக்கெட்களையும் இழந்தது.
வங்கதேச அணி இரண்டாவது நாளில் 10 விக்கெட்களையும் இழந்தது. ஆக மொத்தம் ஒரே நாளில் 17 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டுள்ளன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மூன்று முறை ஒரே நாளில் அதிகபட்சமாக 15 விக்கெட்கள் வீழ்ந்துள்ளன. இப்போது தான் முதன்முறையாக அதை தாண்டி விக்கெட்கள் சரிந்துள்ளன.
இதற்கு முன் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 1979 இல் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில் 15 விக்கெட்கள் வீழ்ந்தன. அதன் பின் 2021 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இரண்டாவது நாள் மற்றும் நான்காவது நாளில் இரண்டு முறை 15 விக்கெட்கள் வீழ்ந்தன. அதற்கு அடுத்து தற்போது 2024-ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் இரண்டாவது நாளில் 17 விக்கெட்கள் பறிபோய் உள்ளன.