சென்னை: இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சுமார் 634 நாட்களுக்கு பின் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்று இருந்த ரிஷப் பண்ட், இந்த போட்டியில் சதம் அடித்து இருந்தார். தனக்கு மிகவும் பிடித்த சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சதம் அடித்தது குறித்து அவர் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இந்த சதம் மூலம் நீண்ட காலமாக டெஸ்ட் போட்டிகளில் ஆடாத போதும் தான் நல்ல ஃபார்மில் இருப்பதை அவர் நிரூபித்து இருக்கிறார். இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் 128 பந்துகளில் 109 ரன்கள் எடுத்து இருந்தார். 13 ஃபோர் மற்றும் 4 சிக்ஸ் அடித்து இருந்தார். இந்த வெற்றிக்கு அவரது சதமும் முக்கிய காரணமாக இருந்தது.

இந்த நிலையில் போட்டிக்கு பின் ரிஷப் பண்ட் பேசுகையில், "இந்த சதம் நிச்சயம் சிறப்பானது. முதலில் நான் சென்னையில் விளையாடுவதை மிகவும் விரும்புகிறேன். இரண்டாவது நான் எனது காயத்தில் இருந்து மீண்ட பின் மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட வேண்டும் என நினைத்தேன். டெஸ்ட் போட்டிகளில் இதுவே எனது முதல் ஆட்டம். நான் நிச்சயம் நன்றாக ஆடி இருக்கிறேன் என நினைக்கிறேன்." என்றார்.
மேலும், "நிச்சயமாக இது எனக்கு நெகிழ்ச்சியான தருணமாக இருக்கிறது. நான் ஒவ்வொரு போட்டியிலும் அதிக ரன் குவிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டை பற்றி சொல்ல வேண்டும் என்றால் எனக்கான ஆட்டம் இதுதான். டெஸ்ட் போட்டியின் போது ஆடுகளத்தில் இருப்பது அளிக்கும் மகிழ்ச்சியை, வேறு எதுவும் எனக்கு அளிக்க முடியாது." என்றார் பண்ட்.
"வெளியில் இருக்கும் மக்கள் என்ன சொல்வார்கள் என்று எனக்கு தெரியாது. ஆனால், போட்டியின் சூழ்நிலையை நான் எனது வழியில் புரிந்து கொண்டு ஆட முயற்சி செய்கிறேன். 30 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த நிலையில் நிச்சயமாக பெரிய கூட்டணி ஒன்றை அமைக்க வேண்டும். சுப்மன் கில்லுடன் சேர்ந்து நான் அதைத்தான் செய்தேன். நம்முடன் நல்ல உறவில் இருக்கும் ஒருவருடன் இப்படி கூட்டணி அமைத்து ஆடுவது என்பது நிச்சயம் சிறப்பான ஒன்று." என்று ரிஷப் பண்ட் கூறினார்.