சென்னை: இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியின் மூத்த வீரர் ஷகிப் அல் ஹசன் பேட்டிங் செய்த போது ஒரு கருப்பு நிற கயிறை வாயில் வைத்து கடித்தபடி பேட்டிங் செய்தார். அதன் மர்மம் என்ன? என்பது பற்றி தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதி வருகின்றன.
இந்த தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 376 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 149 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அப்போது வங்கதேச அணியின் ஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் 64 பந்துகளை சந்தித்து 32 ரன்கள் சேர்த்தார். அந்த இன்னிங்ஸில் அதிக ரன் சேர்த்தது அவர்தான். அவர் பேட்டிங் செய்த போது ஒரு கருப்பு நிற கயிறை வாயில் அவ்வப்போது கடித்துக் கொண்டே இருந்தார்.

அது என்ன? என்று வங்கதேச அணியின் முன்னாள் வீரர் தமிம் இக்பால் பின்னர் விவரித்தார். இடது கை பேட்ஸ்மேன் ஆன ஷகிப் அல் ஹசன் பேட்டிங் செய்யும் போது சில சமயம் தன் தலையை லெக் திசையை நோக்கி சாய்த்து வைத்துக் கொள்வதை தவிர்க்கவே அந்த கருப்பு நிற கயிறை அவ்வப்போது கடித்துக் கொண்டே இருக்கிறார் என்றார் தமிம்.
அந்த கருப்பு நிற கயிறு ஹெல்மெட்டில் இணைக்கப்பட்டிருந்தது. அதை வாயில் வைத்து கடித்து இழுப்பதன் மூலம் தன் தலை லெக் திசையில் சாயாமல் ஷகிப் அல் ஹசன் பார்த்துக் கொள்கிறார். இந்த நுட்பத்தை வைத்து தனது பலவீனத்தை அவர் சரி செய்து கொண்டு வருகிறார். இந்த நுட்பம் பலருக்கு பயனளிக்காமல் போகலாம். ஆனால், இது தான் ஷகிப் அல் ஹசனுக்கு வேலை செய்கிறது என தமிம் இக்பால் கூறினார்.
முதல் இன்னிங்ஸின் முடிவில் இந்திய அணி 227 ரன்கள் முன்னிலை பெற்றது. அடுத்து இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 287 ரன்கள் சேர்த்தது. வங்கதேச அணிக்கு 515 ரன்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மூன்றாம் நாள் ஆட்ட நேரம் முடிவில் வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்து உள்ளது. ஷகிப் அல் ஹசன் ஐந்து ரன்கள் எடுத்த நிலையில் களத்தில் இருக்கிறார்.