மும்பை: இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செப்.19ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இந்திய அணி வீரர்கள் அனைவரும் 43 நாட்கள் ஓய்வுக்கு பின் மீண்டும் கிரிக்கெட் களத்தில் இறங்கவுள்ளனர். இந்த டெஸ்ட் போட்டியுடன் இந்திய அணியின் ஹோம் சீசன் தொடங்கவுள்ளது. இதனால் சேப்பாக்கம் மைதானத்தில் 5 நாட்கள் பயிற்சி முகாமில் இந்திய வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல் இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள கவுதம் கம்பீருக்கு இதுதான் முதல் டெஸ்ட் தொடராகும். ஏற்கனவே இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. தற்போது டெஸ்ட் தொடரை வெற்றிகரமாக தொடங்க வேண்டும் என்பதில் கம்பீர் தீவிரமாக இருக்கிறார். அதேபோல் அணித் தேர்விலும் கம்பீரின் கைகள் ஓங்கியிருப்பதாக பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இடதுகை பவுலரை தேர்வு செய்ய வேண்டும் என்பதில் கம்பீர் ஆர்வமாக இருந்தார். அதற்கேற்றபடி இளம் பவுலரான யாஷ் தயாள் இந்திய அணிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். இந்த நிலையில் கவுதம் கம்பீரின் ஸ்டைல் குறித்து இந்திய முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா பேசி இருக்கிறார். அதில், கவுதம் கம்பீரின் ஸ்டைல் தெளிவாக இருக்கிறது. அவர் அட்டாக் மட்டுமே செய்யப் போகிறார்.
இதனால் ஒரு விஷயம் மட்டும் நிச்சயம். அடுத்த சில ஆண்டுகளுக்கு இந்திய கிரிக்கெட் போட்டிகளில் கொஞ்சம் கூட சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது. நிச்சயமாக அவர் புதிய விஷயங்களை முயற்சி செய்து கொண்டே இருப்பார். அதேபோல் அவர் நம்பும் விஷயங்களையும் தொடர்ந்து செய்வார். பின் சீட்டில் அமர்ந்து நடக்கும் விஷயங்களை வேடிக்கை பார்க்கும் மனிதர் கம்பீர் கிடையாது. முன் களத்தில் நின்று அனைத்தையும் செய்து காட்டுபவர்.
டி20 கேப்டனாக சூர்யகுமார் யாதவ் பொறுப்புக்கு வருவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் திடீரென அவர் சீனுக்குள் வந்து ஆச்சரியம் கொடுத்தார். அதனால் இன்னும் ஏராளமான சர்ப்ரைஸ்கள் இருக்கிறது. அதேபோல் கம்பீர் யாரின் அறிவுரைகளையும் கேட்பவர் கிடையாது. ஏனென்றால் அவர் இந்த இடத்தில் இருப்பதற்கான காரணம் அவர் மட்டும் தான். அவர் ஒரு விஷயத்தை எப்படி கையாள்கிறார் என்பதும் முக்கியம்.
அதனால் இனியும் அவர் யாரின் அட்வைஸையும் கேட்காமல் தொடர்வார் என்று நம்புவோம். இத்தனை நாட்களாக செய்த விஷயங்களால் தான் இந்திய அணியின் பயிற்சியாளராக வருவதற்கு காரணம். அதனால் மனதில் தோன்றும் எண்ணங்கள் மீது நம்பிக்கை வைத்து, அடுத்தடுத்த இலக்குகளை நோக்கி ஓடுவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.