கான்பூர்: வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிரா ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய அணி வெற்றி பெற்று இருக்கிறது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா தான். இரண்டு நாட்களை மட்டுமே வைத்துக் கொண்டு டெஸ்ட் போட்டியை வெற்றி பெறுவது என்பது அத்தனை சாதாரண காரியம் இல்லை.
அதற்கு கடும் திட்டமிடலும், அதை செயல்படுத்த அனுபவமும் வேண்டும். அதை கம்பீர் - ரோஹித் இணை சரியாக செய்து முடித்துள்ளது. இந்திய அணியில் அதிக அளவிலான அனுபவ வீரர்கள் இருந்ததும் அவர்கள் திட்டத்தை செயல்படுத்த உதவியாக இருந்தது. இந்தப் போட்டியின் முதல் மூன்று நாட்கள் மழையால் வெகுவாக பாதிக்கப்பட்டது.

முதல் நாள் ஆட்டத்தில் மட்டும் 35 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. கடைசி இரண்டு நாட்களில் மட்டுமே போட்டி முழுமையாக நடைபெற்றது. இந்த போட்டியின் நான்காவது நாள் ஆட்டத்தில் வங்கதேச அணியை விரைவாக ஆல் அவுட் ஆக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. அதற்கு ஏற்ப பந்து வீச்சாளர்களை சுழற்சி முறையில் வீச வைத்தார் கேப்டன் ரோஹித் சர்மா. அஸ்வின் நீண்ட நேரம் இடைவிடாமல் பந்து வீசிக்கொண்டே இருந்தார்.
அடுத்து இந்திய அணியின் திறமை முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கின் போது வெளிப்பட்டது. அப்போது கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி நான்காம் நாளின் முடிவுக்குள் வங்கதேச அணி எடுத்த ஸ்கோரை விட ஓரளவு அதிகம் ரன் சேர்க்க வேண்டும் என வீரர்களுக்கு அறிவுறுத்தினார். அப்போது அந்த நாளில் 50 ஓவர்கள் மீதமிருந்தன. அந்த திட்டத்தை தானே முன் நின்று செயல்படுத்திக் காட்ட வேண்டும் என்ற உறுதியுடன் இருந்த அவர் துவக்க வீரராக முதல் மூன்று ஓவர்களில் சரவெடி ஆட்டம் ஆடினார்.

ரோஹித் 11 பந்துகளில் 23 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆட்டம் இழந்தாலும் அது அடுத்து வந்த இந்திய பேட்ஸ்மன்களுக்கு அதிரடியாக ஆடுவதற்கான உத்வேகத்தை அளித்தது. ஜெய்ஸ்வால் அபாரமாக அடி 51 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்தார். அடுத்து சுப்மன் கில் 36 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்தார். விராட் கோலி 35 பந்துகளில் 47 ரன்கள் சேர்த்தார். கே எல் ராகுல் 43 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார்.
இதை அடுத்து இந்திய அணி முதல் 34.4 ஓவர்களில் முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. இந்திய அணி 300 அல்லது 400 ரன்களை எடுக்க வேண்டும் என முயற்சிக்கவில்லை. வங்கதேச அணியின் ஸ்கோரை தாண்டினாலே போதுமானது, ஆனால் அதை எத்தனை குறைவான ஓவர்களில் எட்டுகிறோம் என்பதே முக்கியம் என்ற எண்ணத்தில் ஆடியது. இந்த திட்டத்தை வகுத்தது பயிற்சியாளர் கம்பீர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா தான்.
அவர்கள் இருவருமே எந்த சூழ்நிலையிலும் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டவர்கள். அதை இந்த போட்டியில் சரியாக செயல்படுத்தினார்கள். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே இல்லாத வகையில் ஒரு ஓவருக்கு எட்டு ரன்கள் என்ற விகிதத்தில் இந்திய அணி ரன் சேர்த்து இருந்தது.
அடுத்து வங்கதேச அணியை இரண்டாவது இன்னிங்ஸில் 146 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது. இதிலும் ரோஹித் சர்மாவின் கேப்டன்சியை பாராட்ட வேண்டும். ஏனெனில், அவர் இரண்டாவது இன்னிங்ஸ் பந்துவீச்சின் போது ரன்களை கட்டுப்படுத்துவதற்கான ஃபீல்டிங் வியூகத்தை எந்த சூழ்நிலையிலும் அமைக்கவில்லை. மாறாக விக்கெட் வீழ்ச்சிக்கு உதவும் வகையில் பேட்ஸ்மேன்களை சுற்றி அதிக ஃபீல்டர்களை நிற்க வைத்தார்.
அது வங்கதேச பேட்ஸ்மேன்களை அமைதி இழக்கச் செய்தது. அதனாலேயே இந்திய பந்துவீச்சாளர்கள் விரைவாக விக்கெட்களை வீழ்த்தினார்கள். முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் தலா மூன்று விக்கெட்கள் என மொத்தம் 6 விக்கெட்களை வீழ்த்தினார் பும்ரா. அஸ்வின் மொத்தமாக 5 விக்கெட்களை வீழ்த்தினார். ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்களை எடுத்தார்.
பந்துவீச்சாளர்களும் தங்கள் அனுபவத்தை சரியாக பயன்படுத்தி வங்கதேச அணியின் விக்கெட்களை சீரான இடைவெளியில் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தனர். அடுத்து இந்திய அணி 95 ரன்கள் என்ற இலக்கை 17.2 ஓவர்களில் எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலமாக டெஸ்ட் தொடரை 2 - 0 என இந்திய அணி வென்றது.