மும்பை : வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வரும் 19ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது. சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான சேப்பாக்கம் மைதானத்தில் இரண்டு அணியிலுமே தலைசிறந்த ஸ்பின்னர்கள் இருக்கின்றனர்.
இந்த போட்டியில் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் என்ற சூழல் எழுந்துள்ளது. அதிலும் இந்திய வீரர்கள் தற்போது சுழற் பந்துவீச்சுக்கு எதிராக கடுமையாக தடுமாறுகிறார்கள். பழைய சச்சின், டிராவிட், சேவாக், லக்ஷ்மன் போன்ற வீரர்கள் சுழற் பந்துவீச்சை அல்வா சாப்பிடுவது போல் சுலபமாக எதிர்கொண்டு ரன் அடிப்பார்கள்.

ஆனால் இப்போது இருக்கும் பேட்ஸ்மேன்கள் சுழற் பந்துவீச்சை எதிர்கொள்ள தடுமாறுகிறார்கள். இதனால் ஷகிபுல் ஹசன் போன்ற அனுபவமிக்க வீரர்களை எதிர்கொள்வது இந்திய அணி வீரர்களுக்கு சுலபமாக இருக்காது. இந்த நிலையில் இந்திய அணியில் ஏற்கனவே மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் இருப்பார்கள் என கணிக்கப்பட்டிருக்கிறது.
அதன்படி அஸ்வின், ஜடேஜா, அக்சர் பட்டேல் அல்லது குல்தீப் யாதவ் ஆகிய மூன்று வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். ஆனால் இந்த மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் மட்டும் போதாது என்ற முடிவில் இருக்கிறார். அதன்படி கம்பீர் தற்போது ஒரு முடிவை எடுத்திருக்கிறார். அதாவது, பேட்ஸ்மேன்களும் இனி சுழற் பந்துவீச்சை கற்றுக் கொண்டு பந்து வீச வேண்டும் என்பதுதான் அதன் திட்டம் ஆகும்.
இதன் மூலம் ரோகித் சர்மா, விராட் கோலி போல் நாங்கள் வெறும் பேட்டிங் மட்டும்தான் செய்வோம் என்று கூற முடியாது. இனி பேட்ஸ்மேன்கள் பந்து வீசவேண்டும் பந்துவீச்சாளர்களும் பேட்டிங் செய்ய வேண்டும் என்பதுதான் கம்பீரின் புதிய மந்திரமாக இருக்கிறது. அதன்படி தற்போது சென்னையில் நடைபெற்று வரும் பயிற்சி முகாமில் ஜெய்ஸ்வால் போன்ற வீரர்கள் சுழற் பந்து வீச்சை வீசி பயிற்சி எடுத்து வருகின்றனர்.
ஏற்கனவே மூன்று வீரர்கள் உள்ள நிலையில் நான்காவது ஏன் ஒரு பேட்ஸ்மேன் சுழற்பந்து வீச்சை வீச வேண்டும் என்பது ஒரு கேள்வியாக வரலாம். ஆனால் சுழற் பந்துவீச்சாளரை வைத்து பந்தை வீசுவதன் மூலம் ஆட்டம் வேகமாக முடிவடையும். இன்னும் சொல்லப்போனால் ஒரு நாளைக்கு 90 ஓவர் வீச வேண்டும். இந்த சூழலில் மூன்று அல்லது நான்கு சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து செயல்படும்போது அந்த இலக்கை கேப்டனால் எட்ட முடியும்.
அது மட்டுமல்லாமல் ஆடுகளமும் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் போது யார் சுழற் பந்து வீசினாலும் அவர்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் நிச்சயம் விக்கெட்டுகள் கிடைக்கும். ஜெய்ஸ்வால் தன்னுடைய திறமையை சுழற்பந்துவீச்சாளராக நிரூபித்தால் அவரை வெளிநாடுகளில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் அணியின் இரண்டாவது சுழற் பந்துவீச்சாளராக பயன்படுத்த முடியும்.
ஏனென்றால் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மூன்று வேக பந்துவீச்சாளர்கள் இருப்பதால் சுழற் பந்துவீச்சாளர்கள் ஒருவர்தான் களமிறங்க முடியும். இந்த நிலையில் ஜெய்ஸ்வால் போன்ற ஆல்ரவுண்டர்கள் சுழற் பந்து வீச்சில் கை கொடுத்தால் அது அணியின் பேலன்ஸ்க்கு நன்மையாக அமையும். இதன் காரணமாக தான் இப்போது ஜெய்ஸ்வால் போன்ற வீரர்களை சுழற் பந்துவீசை கம்பீர் அறிவுறுத்தியுள்ளார். இதனால் ரவி சாஸ்திரி பயிற்சியாளராக இருந்த காலத்தில் பேட்ஸ்மேன்கள் ஏமாற்றியது போல் இனி கம்பீரிடம் ஏமாற்ற முடியாது.