ஹைதராபாத்: சஞ்சு சாம்சன் வங்கதேச அணிக்கு எதிராக அடித்த சதம் இந்திய கிரிக்கெட்டில் மிகப்பெரிய வரலாற்று சாதனையை நிகழ்த்தி உள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இதே சஞ்சு சம்சனுக்காக கவுதம் கம்பீர் சமூக வலைதளத்தில் கிரிக்கெட் ஆர்வலர்களுடன் சண்டை போட்டார். அப்போது அவர் சொன்ன வார்த்தையை சஞ்சு சாம்சன் இப்போது நிரூபித்துக் காட்டி இருக்கிறார்.
2020 ஆம் ஆண்டு சஞ்சு சாம்சன் தான் இந்தியாவின் சிறந்த விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் என கவுதம் கம்பீர் சமூக வலைதளத்தில் விவாதம் செய்தார். அன்று அவரது நிலைப்பாட்டை பார்த்து பலரும் நகைத்தனர். அப்போது ரிஷப் பண்ட் இந்திய டி20 அணியில் இடம் பெற்று இருந்தார். அவர்தான் இந்தியாவின் சிறந்த விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் என கம்பீருடன் ரசிகர்களும், கிரிக்கெட் ஆர்வலர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஆனால், அன்று கவுதம் கம்பீர் சொன்ன வார்த்தையை அவர் பயிற்சியாளராக இருக்கும்போது அவருக்கு முன் நிரூபித்து காட்டி இருக்கிறார் சஞ்சு சாம்சன். வங்கதேச அணிக்கு எதிராக மூன்றாவது டி20 போட்டியில் 40 பந்துகளில் சஞ்சு சாம்சன் அடித்த சதம் தான் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஒருவர் அடித்த முதல் சர்வதேச டி20 சதம் ஆகும். இந்தப் போட்டியில் அவர் 47 பந்துகளில் 111 ரன்கள் எடுத்து இருந்தார்.
இதற்கு முன் இந்திய டி20 அணியில் அதிக போட்டிகளில் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ஆக செயல்பட்ட தோனி மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவரும் இதுவரை சதம் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சஞ்சு சாம்சன் மிகப்பெரிய வரலாற்று சாதனையை நிகழ்த்தி இருக்கிறார். கடந்த ஆறு ஆண்டுகளாகவே கவுதம் கம்பீர் வர்ணனையின் போதும், கிரிக்கெட் நிகழ்ச்சிகளிலும், சமூக வலைதளங்களிலும் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாகவே பேசி வந்தார்.
அவருக்கு இந்திய அணியில் சரியான வாய்ப்பு அளிக்கவில்லை என அவர் தொடர்ந்து சுட்டிக் காட்டிக் கொண்டே இருந்தார். தற்போது கவுதம் கம்பீர் பயிற்சியாளராக வந்த பின் அவரே முன் நின்று சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பை வழங்கினார். வங்கதேச அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் சஞ்சு சாம்சன் சற்று தடுமாறினாலும், மூன்றாவது போட்டியில் அசாதாரணமாக விளையாடினார்.
ஒரே ஓவரில் ஐந்து சிக்ஸ் அடித்து அனைவரையும் மிரள வைத்தார். கவுதம் கம்பீரால் கூட அதை நம்ப முடியவில்லை. அந்த வகையில் சஞ்சு சாம்சன் தனக்காக பேசிய கவுதம் கம்பீருக்கு பெருமை தேடித் தந்துள்ளார். மேலும், ரிஷப் பண்ட் தான் இந்திய அணியின் சிறந்த விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் என்ற வாதத்தை உடைத்து இருக்கிறார் சஞ்சு சாம்சன்.