சென்னை: 25 வயதில் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பொறுப்பை கொடுத்துவிட்டு தோனி ஓய்வை அறிவித்த தருணம் குறித்து பயிற்சியாளர் கவுதம் கம்பீரிடம் நட்சத்திர வீரர் விராட் கோலி பகிர்ந்து கொண்டுள்ளார். தோனி குறித்து கம்பீரிடம் விராட் கோலி பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ளது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஷான்டோ பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இந்திய அணியை பொறுத்தவரை 3 வேகப்பந்துவீச்சாளர்கள், 2 ஸ்பின்னர்களுடன் களமிறங்கி இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்பாக இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி இருவரும் நடத்திய உரையாடல் வெளியாகியது. அதில் விராட் கோலியிடம் 2014-15 ஆஸ்திரேலியா தொடர் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்புக்கு வந்தது கூடுதல் சவாலை எனக்கு அளித்தது.
இந்திய அணியில் மாற்றங்கள் நடந்து வந்த நேரம் அது. சீனியர் வீரர்களான நீங்கள் உட்பட பலரும் இளம் வீரர்களுக்கு வழிவிட தொடங்கினர். அதேபோல் தோனியும் கேப்டன்சியில் இருந்து விலகி, டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்தார். 25 வயதில் கேப்டன்சி பொறுப்பு அளிக்கப்பட்ட போது, சக வீரர்களும் எனது வயதையொத்து தான் இருந்தனர். நாங்கள் எங்களுக்கென்று ஒரு பெயரை எப்படி உருவாக்க போகிறோம் என்று புரியவில்லை.
அப்போது இதற்கான திட்டத்தை பேச தொடங்கினோம். அடுத்தடுத்து இந்திய அணி அடைந்த வளர்ச்சி அதிர்ஷ்டத்தால் வந்தவை அல்ல. அடுத்த 7 ஆண்டுகளில் இந்திய அணி எந்த நிலையில் இருக்க வேண்டும் என்று ஒரு கனவை உருவாக்கினோம். அந்த கனவுக்கு விடையை தேட தொடங்கிய போது, திட்டங்கள் உருவாகின. அதற்கு முதலில் தரமான வேகப்பந்துவீச்சாளர்களை உருவாக்க வேண்டும் என்று புரிந்தது.
அதேபோல் ஒரு நல்ல விக்கெட் கீப்பர் ஸ்கோரை 350 முதல் 400 ரன்களுக்கு கொண்டு செல்லும் வகையில் தயார் செய்ய வேண்டும். 7வது பேட்ஸ்மேனுக்கான வாய்ப்பு இந்திய அணிக்கு இல்லை. அது இன்னும் எங்களுக்கு சவாலாக இருந்தது. ஆனால் அந்த சவாலை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு செய்து முடித்தோம் என்று தெரிவித்தார்.
இதனை சிரித்து கொண்டே கேட்ட கம்பீர், நீங்கள் எப்படியான மனநிலையில் இருந்தீர்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. 25 வயதில் கேப்டன்சியை ஏற்றுக் கொண்டு, தரமான பவுலிங் யூனிட்டை உருவாக்கியது சாதாரணமல்ல. ஏனென்றால் டெஸ்ட் போட்டிகளை வெல்வதற்கு 20 விக்கெட்டுகளை எடுக்க வேண்டும். அதுவரை நம்மால் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெல்ல முடியாது. இந்திய அணியில் அப்படியான பவுலர்களை தேட பிடிப்பதற்கு காலம் பிடிக்கும்.
ஆனால் அதுதான் உங்களை வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாக மாற்றியது. அதற்கு நிச்சயம் உங்களுக்கும் பாராட்டுகள் கொடுக்க வேண்டும். ஏனென்றால் ஒரு அணியில் நல்ல 6 முதல் 7 பேட்ஸ்மேன்களை வைத்து பேட்டிங் வரிசையை உருவாக்கிவிட முடியும். ஆனால் பவுலர்களை உருவாக்குவது அப்படியல்ல. அதேபோல் களத்தில் வேகப்பந்துவீச்சாளர்களுடன் நீங்கள் காட்டிய உடல்மொழியும் மிக முக்கியமானது.
ஷமி, பும்ரா, உமேஷ், இஷாந்த் உள்ளிட்டோரை வைத்து வெளிநாட்டில் டெஸ்ட் கிரிக்கெட்டை வெல்ல முடியும் என்று நம்பிக்கை வந்தது. அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் தான் முதல்முறையாக நீங்கள் கேப்டன்சி செய்தீர்கள். அந்த போட்டியில் சுமார் 400 ரன்களை நாம் சேஸிங் செய்தோம். அப்படி இருந்த போதும், இந்திய அணி கொஞ்சம் கூட தோல்விக்கு பயந்து பின் வாங்கவில்லை. அதுதான் இந்திய அணியின் மனநிலையாக இருக்க வேண்டும். அப்படியான கலாச்சாரத்தை இந்திய வீரர்களுக்குள் கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.