மும்பை : இந்திய வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 27ஆம் தேதி கான்பூரில் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிகப்பெரிய ரன்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்றாலும் அணியில் மிகப்பெரிய மைனஸ் இருக்கிறது.
கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் என அணியின் மூன்று அனுபவ வீரர்களும் வங்கதேசத்துக்கு எதிராக தடுமாறினர். மேலும் கில் மற்றும் ஜெய்ஸ்வால் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், வேகப்பந்துவீச்சுக்கு எதிராக இருவரும் தடுமாறினார்கள்.

இதனால் வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி அங்கு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்திய ஆடுகளத்தில் வங்கதேச வேகப்பந்து வீச்சை நமது பேட்ஸ்மேன்களால் எதிர்கொள்ள முடியவில்லை என்றால் ஆஸ்திரேலிய மண்ணில் பாட் கம்மின்ஸ்,ஹேசல்வுட், ஸ்டார்க் போன்ற உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்களை எப்படி எதிர்கொள்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனால் அனுபவம் வாய்ந்த வீரர்களை அழைத்துச் செல்வதே சரியான விஷயமாக இருக்கும் என்பதை கம்பீர் உணர்ந்திருக்கிறார். இதன் காரணமாக இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்ட புஜாராவுக்கு மீண்டும் அணிக்குள் வர வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக துலீப் கோப்பை தொடரில் புஜாரா, ரகானே என இருவரும் சேர்க்கப்படவில்லை.
இதனால் அவர்கள் இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு விட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பியதை பார்த்து இருவருக்கும் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க கம்பீர் முடிவெடுத்து இருக்கிறார். அதன்படி இராணி கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என தெரிகிறது.
இதில் மும்பை அணியுடன் இதர இந்திய அணி விளையாடும். இதில் மும்பை அணியின் கேப்டனாக ரகானே அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஹானே தலைமையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் மும்பை அணி தங்களது 42வது ரஞ்சிக் கோப்பை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதனால் ரகானே மீண்டும் அணிக்கு திரும்ப இருக்கிறார். மேலும் மும்பை அணியில் ஸ்ரேயாஸ் ஐயர், சர்துல் தாக்கூர் ஆகியோர் களமிறங்க உள்ளார்கள்.
இதன் மூலம் இந்த மூன்று வீரர்களுக்குமே மீண்டும் இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்ப ஒரு வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. கடைசியாக ரகானே கடந்த 2023 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பிறகு அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதேபோன்று இந்திய அணியின் மற்றொரு நட்சத்திர வீரரான புஜாராவும் இராணி கோப்பையில் இதர இந்திய அணியில் சேர்க்கப்படுவார் என தெரிகிறது.
இந்த முடிவுக்கு பின்னணியில் பயிற்சியாளர் கம்பீர் தான் இருக்கிறார் என தெரிகிறது. ஆஸ்திரேலியா போன்ற தொடர்களில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் தேவைப்படுவார்கள் என்பதால் இந்த முடிவை அவர் எடுத்திருக்கலாம். இதேபோன்று இந்திய அணிக்கு ஆல் ரவுண்டர்கள் தேவை என்பதால் சர்துல் தாக்கூருக்கும் டெஸ்ட் அணியில் திரும்ப வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.