மும்பை : இந்தியா, வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை வியாழக்கிழமை தொடங்கும் நிலையில் பயிற்சியாளர் கம்பீரும், விராட் கோலியும் நடத்திய உரையாடல் வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது. பயிற்சியாளராக கம்பீர் பதவி ஏற்ற பிறகு நடைபெறும் முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும்.
அது மட்டுமல்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இறுதிப் போட்டியில் இந்திய அணி தகுதி பெற வேண்டும் என்றால் அடுத்த ஐந்து டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். ஏனென்றால் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் வெல்வதற்கு மிகவும் கடினமானது என்பதால் சொந்த மண்ணில் இந்தியா வெற்றியை பெற்றால் அது பெரும் சாதகமாக அமையும்.

இந்த சூழலில் கௌதம் கம்பீர் மற்றும் விராட் கோலி ஆகியோர் நடத்திய உரையாடலில் இந்திய அணியின் எதிர்கால திட்டம் மற்றும் கடந்த காலத்தில் இரு வீரர்களும் எவ்வாறு களத்தில் செயல்பட்டனர் என்பது குறித்து பேசினர். அப்போது விராட் கோலி, கௌதம் கம்பீரிடம் நீங்கள் பலமுறை எதிரணி வீரர்களிடம் சண்டை போட்டு இருக்கிறீர்கள்.
அப்படி சண்டை போடும்போது உங்களுடைய கவனம் சிதறாதா? சண்டை போடுவதன் மூலம் நீங்கள் ஆட்டம் இழந்து விடுவீர்கள் என்று நினைத்தது உண்டா என்று கேள்வி கேட்டார். இதற்கு பதில் அளித்த கம்பீர், என்னைவிட நீங்கள் தான் அதிகமாக களத்தில் எதிர் அணியிடம் சண்டை போட்டு இருக்கிறீர்கள். எனவே இந்த கேள்விக்கு என்னை விட உங்களுக்கு தான் சரியான பதில் தெரியும் என்று கூறினார்.
உடனே இருவரும் கலகலவென்று சிரித்தார்கள். இதனை தொடர்ந்து பேசிய கம்பீர் களத்தில் சண்டை போடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். களத்தில் சண்டை போடுவதன் மூலம் அது எனக்கு உத்வேகத்தை கொடுக்கும். இன்னும் நன்றாக விளையாட வேண்டும் என்ற நோக்கத்தை அது தரும். இதுவரை களத்தில் நடந்த சண்டையால் என்னுடைய கவனம் சிதறியது கிடையாது.
இன்னும் சொல்லப்போனால் சண்டைக்கு பிறகு தான் என்னுடைய கவனம் இன்னும் அதிகமாகும். சில நேரம் நான் வேண்டுமென்றே எதிரணி வீரர்களிடம் சண்டையிட விரும்புவேன். இதன் மூலம் நாம் தொடர்ந்து ஊக்கத்துடன் விளையாடி வெற்றி பெற முடியும் என்று நினைப்பேன். அது மட்டுமல்லாமல் களத்தில் நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதை விட அந்தப் போட்டியில் வெற்றி பெற்றோமா தோல்வி அடைந்தோமா என்பது தான் முக்கியம்.
நான் கிரிக்கெட் விளையாடி முடித்து விட்டேன். இப்போது நீங்கள் என்னிடம் போட்ட சண்டை குறித்து என்றாவது வருத்தப்பட்டு இருக்கிறீர்களா என்று கேள்வி கேட்டால் நிச்சயம் நான் இல்லை என்று தான் பதில் சொல்வேன் என்று கம்பீர் கூறினார். கம்பீரின் இந்த பதிலை ஏற்றுக்கொண்ட விராட் கோலி, களத்தில் சண்டை போடுவது நல்லது என்பதுதான் என்னுடைய கருத்து.
அதை உங்கள் வாயிலிருந்து வர வைக்க தான் இந்த கேள்வியை கேட்டேன் என்று கூறினார்.அதற்கு கம்பீர் ஆக்ரோசமாக களத்தில் இருப்பது தான் எனது குணம். இதுதான் உங்களுடைய குணம். நாம் யாருக்காகவும் நம்மை மாற்றிக் கொள்ளக் கூடாது. நமக்கு ஒரு விஷயம் சரியாக நடக்கிறது என்றால் அதனை பின் தொடர்வது தவறில்லை என்று கூறினார்.