சென்னை: இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோத உள்ள முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. பொதுவாக சென்னை சேப்பாக்கம் மைதானம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமானது என்ற கருத்து உள்ளது. ஐபிஎல் போட்டிகளில் கூட ஒவ்வொரு அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் ஆடும் போட்டிகளுக்கு மட்டும் கூடுதல் சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தும்.
ஆனால், இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர அதற்கு நேர்மாறான ஒரு திட்டத்தை கையில் எடுத்துள்ளார். அதன்படி, இந்திய அணி மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் மற்றும் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களை மட்டுமே பயன்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிலும் இந்திய அணியின் மூன்றாவது வேகப் பந்துவீச்சாளர் தான் இதில் துருப்புச் சீட்டு வீரராகவும் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் இந்திய அணியில் ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் இரண்டு முக்கிய வேகப் பந்துவீச்சாளர்களாக இடம் பெற்றுள்ளனர். அவர்களுடன் மாற்று வேகப் பந்துவீச்சாளர்களாக ஆகாஷ் தீப் மற்றும் யாஷ் தயாள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் இருவரில் யாஷ் தயாள் இடது கை வேகப்பந்துவீச்சாளர் ஆவார்.
அதன் காரணமாகவே, அவர் இந்திய டெஸ்ட் அணிக்கு முதன்முறையாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அவர் நிச்சயமாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பந்து வீசுவார் என இந்திய அணி வட்டாரத்தில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இடது கை வேகப் பந்துவீச்சாளரை சந்திப்பது வலது கை பேட்ஸ்மேன்களுக்கு சிக்கலாக இருக்கும்.
எனவே, வங்கதேச அணியின் வலது கை பேட்ஸ்மன்களுக்கு யாஷ் தயாள் மூலம் அழுத்தம் கொடுக்க இந்திய அணி திட்டமிட்டு உள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் பும்ரா, முகமது சிராஜ் மற்றும் யாஷ் தயாள் இந்திய அணியின் மூன்று வேகப் பந்துவீச்சாளர்களாக செயல்பட உள்ளனர். இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களாக ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இடம் பெறுவார்கள்.
அக்சர் பட்டேல் மற்றும் குல்தீப் யாதவுக்கு முதல் டெஸ்டில் பிளேயிங் லெவனில் இடம் கிடைக்காது எனவும் கூறப்படுகிறது. சென்னை சேப்பாக்கத்தில் கூடுதல் சுழற் பந்துவீச்சாளர்கள் தேவை என்பதால் தான் இந்திய அணிக்கு ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல் மற்றும் குல்தீப் யாதவ் என நான்கு சுழற் பந்துவீச்சாளர்கள் அறிவிக்கப்பட்டதாக முதலில் கூறப்பட்டது.
ஆனால், தற்போது அதற்கு நேர்மாறான ஒரு முடிவை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் எடுத்து இருக்கிறார். இதன் மூலம் வங்கதேச அணிக்கு வேகப் பந்துவீச்சாளர்கள் மூலம் அழுத்தம் கொடுக்க அவர் திட்டமிட்டு இருக்கிறார். சென்னை டெஸ்ட் போட்டியில் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமான சிவப்பு நிற பிட்ச் தயாரிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஒருவேளை முதல் டெஸ்ட் போட்டியில் வேகப் பந்துவீச்சு எடுபடவில்லை என்றால் இந்திய அணி சிக்கலில் மாட்டிக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. இந்திய அணியில் பகுதி நேர சுழற் பந்துவீச்சாளர்களாக ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் மட்டுமே உள்ளனர். அவர்கள் மூவரும் உள்ளூர் போட்டிகளில் கூட அதிக அளவில் பந்து வீசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.