சென்னை: இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் சதம் விளாசியதற்கு நான் எந்த வகையிலும் காரணமில்லை என்று ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார். அஸ்வின் விளையாடிய போது சிங்கிள்கள் ஓடினாலே போதும் என்று மட்டுமே கூறியதாகவும், சொந்த மண்ணில் அவர் மிகச்சிறந்த இன்னிங்ஸை ஆடியுள்ளதாகவும் பாராட்டியுள்ளார்.
வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 376 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், வங்கதேசம் அணி முதல் இன்னிங்ஸில் 149 ரன்காளுக்கு ஆல் அவுட்டாகியது. இதன் மூலமாக 2வது இன்னிங்ஸில் இந்திய அணி 227 ரன்கள் முன்னிலை பெற்றது.

தொடர்ந்து 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 2வது நாள் ஆட்டம் நேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 81 ரன்கள் சேர்த்திருக்கிறது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் அசத்தலாக செயல்பட்டுள்ளார். பேட்டிங்கில் 86 ரன்கள் விளாசிய அவர், பவுலிங்கிலும் லிட்டன் தாஸ் மற்றும் ஷகிப் அல் ஹசன் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.
இதுகுறித்து ரவீந்திர ஜடேஜா பேசுகையில், சதமடிக்க முடியாமல் ஆட்டமிழந்ததில் எந்த ஏமாற்றமும் இல்லை. ஏனென்றால் ஆட்டத்தின் ஒரு பகுதி தான் இது. 2வது இன்னிங்ஸில் இந்திய அணி சிறந்த இலக்கை நிர்ணயிக்க வேண்டிய தேவை உள்ளது. முதல் இன்னிங்ஸில் சிறப்பாக பவுலிங் செய்தது மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் போட்டியிலேயே 300வது விக்கெட்டை வீழ்த்த சிறந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இன்னும் 120 முதல் 150 ரன்களை சேர்க்க வேண்டும்.
அதேபோல் 2வது இன்னிங்ஸில் வங்கதேசம் அணியை விரைவாக வீழ்த்த வேண்டும். தற்போதைய சூழலில் பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக உள்ளது. அதேபோல் வேகப்பந்துவீச்சாளர்களுக்கும் உதவியாக உள்ளது. வேகப்பந்துவீச்சாளர்கள் சரியான லைன் மற்றும் லெந்தில் வீசினால் நிச்சயம் விக்கெட்டுகளை வீழ்த்த முடியும். முதல் இன்னிங்ஸின் போது அஸ்வினுக்கு எந்த அட்வைஸும் கொடுக்கவில்லை. நான் அவரிடம் எந்த தவறையும் செய்ய மாட்டோம் என்றே நம்பிக்கை கொடுத்தேன்.
அதனால் 3 ரன்கள் ஓடாமல் சிங்கிள்கள் ஓடினாலே போதுமானது என்று முடிவு செய்தோம். அவரை ஓடி ஓடி கஷ்டப்படுத்தப் போவதில்லை என்றும் கூறினேன். அஸ்வின் அவரின் சொந்த மண்ணில் மிகச்சிறந்த இன்னிங்ஸை விளையாடி இருக்கிறார். அதேபோல் இந்த பிட்சில் வேகப்பந்துவீச்சாளர்கள், ஸ்பின்னர்கள் இருவருக்கும் உதவி இருக்கிறது. தாழ்வாக வீசும் போது ஸ்பின்னர்களால் விக்கெட் வீழ்த்த முடியும் என்று தெரிவித்துள்ளார்.