மும்பை : வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே பட்டையை கிளப்பி இருக்கிறார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி இறுதியில் தோல்வியை தழுவியது.
இதை அடுத்து ரோகித் சர்மா டி20 போட்டிகளில் சில காலம் வராமல் இருந்தார். அப்போது ஹர்திக் பாண்டியா தான் இந்திய டி20 அணியின் கேப்டனாக செயல்பட்டார். ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு சாம்பியன் பட்டத்தையும் அடுத்த ஆண்டு இறுதிப்போட்டி வரையும் அழைத்துச் சென்றதால் ஹர்திக் பாண்டியா நீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்தது.

இதனால் இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டன் ஹர்திக் பாண்டியா தான் என்று ரசிகர்கள் நம்பினர். எனினும் ஹர்திக் பாண்டியா அதன் பிறகு காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் ஹர்திக் பாண்டியா சில போட்டிகளில் கேப்டன் பதவியில் செயல்பட்டாலும், அவர் முன்பு போல் புத்திசாலித்தனமாக களத்தில் செயல்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.
எனினும் ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் யார் கேப்டனாக இருக்க போகிறார்கள் என்று கேள்விக்கு பதில் இல்லாததால், தற்போது ரோகித் சர்மா ஓய்வு பெற்ற பிறகு அவர்தான் கேப்டனாகப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்த சூழலில் தான் கௌதம் கம்பீர் மற்றும் அஜித் அகார்கர் ஆகியோர் பவுலர்களை கேப்டனாக நியமித்தால் அவர்கள் காயும் அடையும்போது பெரும் சிக்கல் ஏற்படுவதாக கூறி ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பதவி தர மறுத்துவிட்டனர்.
ஹர்திக் காயத்தில் இருந்த காலத்தில் சூரியகுமார் யாதவ் கேப்டன் பதவிக்கு வந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக அணியை வழி நடத்தினார். இதன் பிற்கு இந்திய டி20 அணியின் முழு நேர கேப்டனாக சூர்யா வந்த பிறகு, இலங்கைக்கு எதிரான டி20 தொடர் ஆகியவற்றில் எல்லாம் சூரியகுமார் யாதவ் சிறப்பாக செயல்பட்டு உள்ளார்.
2026 ஆம் ஆண்டு வரை சூரிய குமார் தான் டி20 இந்திய அணியின் கேப்டனாக இருக்கப் போகிறார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமக்கு திறமை இருந்தும் கேப்டன் பதவி தராமல் ஓரங்கட்டப்பட்ட விட்டதாக ஹர்திக் பாண்டியா ஏமாற்றத்தில் இருக்கிறார். இந்த சூழலில் தான் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஹர்திக் பாண்டியா பட்டையை கிளப்பினார்.
முதலில் பந்துவீச்சில் ஹர்திக் பாண்டியா நான்கு ஓவர்கள் வீசி 26 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். இதேபோன்று பேட்டிங்கில் நடுவரிசையில் விளையாடிய ஹர்திக் பாண்டியா 16 பந்துகளில் 39 ரன்களை விளாசினார். இதில் ஐந்து பௌண்டரிகளும், இரண்டு சிக்சர்களும் அடங்கும். ஹர்திக் பாண்டியாவின் ஸ்ட்ரைக் ரேட் 243 என்ற அளவில் இருந்தது. இதனால் கேப்டனாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் டி20-ல் நான் கில்லி தான் என்பதை ஹர்திக் பாண்டியா மீண்டும் நிரூபித்து இருக்கிறார்.