மும்பை : வங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா சிறப்பாக செயல்பட்டு அசத்தி இருக்கிறார். இந்த தொடரில் பேட்டிங்கில் மொத்தமாக 118 ரன்களும், பந்துவீச்சில் ஒரு விக்கெட்டும் ஐந்து கேட்ச்களும் பிடித்ததன் மூலம் ஹர்திக் பாண்டியாவிற்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.
ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு தொடரில் ஹர்திக் பாண்டியா படுமோசமாக செயல்பட்டதை எடுத்து கடும் விமர்சனத்திற்கு ஆளானார். இந்த நிலையில் டி20 உலக கோப்பை தொடர் தற்போது வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடர் ஆகியவற்றில் ஹர்திக் பாண்டியா அபாரமாக செயல்பட்டு ரசிகர்களின் நன்மதிப்பை பெற்று இருக்கிறார்.

இந்த நிலையில் தொடர் நாயகன் விருது வென்ற ஹர்திக் பாண்டியா, தமக்கு கேப்டனும் பயிற்சியாளரும் முழு சுதந்திரம் வழங்கி இருப்பது தான் வெற்றிக்கு காரணம் என்று பாராட்டி பேசி இருக்கிறார். நமக்கு கேப்டன் பதவி கிடைக்கவில்லை என்று கொஞ்சம் கூட ஈகோ இல்லாமல் சூரியகுமார் யாதவையும் கம்பீரையும் அவர் பாராட்டுகிறார்.
இது குறித்து பேசிய அவர் கிரிக்கெட்டை அனுபவித்து மகிழ்ச்சியாக விளையாடினால் நமது திறமை முழு வீச்சில் வெளிப்படும். அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரர்களும் மற்றவர்களின் வெற்றியை தங்களது வெற்றி போல் கொண்டாடுகிறார்கள். இதன் மூலம் அணிக்காக இன்னும் நிறைய சாதிக்க வேண்டும் என்று நினைக்கத் தோன்றும். என்னுடைய உடல் தகுதி தற்போது சிறப்பான அளவில் இருக்கிறது.
கடவுளும் எனக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். நெருக்கடியான காலகட்டத்தில் எனக்கு உதவியும் செய்கிறார். நான் தொடர்ந்து பயிற்சி செய்து வருகிறேன். என்னுடைய பயிற்சியில் நான் எந்த ஒரு மாற்றத்தையும் செய்யவில்லை. நல்ல நாட்களிலும் சரி, என்னுடைய கடினமான நாட்களிலும் சரி, தொடர்ந்து நான் பயிற்சி செய்து வருகிறேன்.
கடைசி ஓவரில் நான் ஆடிய கவர் ஷார்ட் என்னுடைய நம்பிக்கையை அதிகரித்து இருக்கிறது. தினமும் இப்படி ஒரு ஷாட்டை என்னால் ஆட முடியாது. ஆனால் இன்று ஆடியதை நினைத்து மகிழ்ச்சி கொள்கிறேன் என்று ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.