மும்பை: இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ரெட் பாலில் பயிற்சி மேற்கொண்டிருப்பது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் இந்திய அணி ஹோம் சீசனை விளையாட தொடங்கவுள்ள நிலையில், இனி அதிகளவிலான டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடவுள்ளது. இதனால் ஹர்திக் பாண்டியா டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மீண்டும் கம்பேக் கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா மீண்டும் பயிற்சியை தொடங்கியுள்ளார். வங்கதேசம் அணிக்கு எதிரான டி20 தொடர் நெருங்கியுள்ள நிலையில், அதற்கான பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஹர்திக் பாண்டியாவின் ஃபிட்னஸ் அவருக்கு எதிராக இருந்ததால், பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் ஆதரவு காரணமாக சூர்யகுமார் யாதவ் கேப்டன் பதவியை கைப்பற்றினார். அதேபோல் ஹர்திக் பாண்டியா டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் மட்டுமல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தனது திறமையை நிரூபிக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன.
ஏனென்றால் ஐசிசி தொடரில் இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா விளையாடும் போது கூடுதல் சாதகம் உள்ளது. குறிப்பாக இங்கிலாந்து மைதானங்களில் ஹர்திக் பாண்டியா விளையாடினால், ஒரு ஸ்பின்னருடன் இந்திய அணியின் பிளேயிங் லெவன் மிகச்சிறப்பாக கட்டமைக்க முடியும். ஆனால் காயம் ஏற்படுமோ என்ற பயத்தால், ஹர்திக் பாண்டியா ஒயிட் பால் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில் வங்கதேசம் அணிக்கு டி20 தொடருக்கு தயாராகி வரும் ஹர்திக் பாண்டியா, ரெட் பாலில் பவுலிங் செய்து பயிற்சி மேற்கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதனால் ஹர்திக் பாண்டியா டெஸ்ட் கிரிக்கெட் பக்கம் கவனத்தை திருப்புகிறாரா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்திய அணி அடுத்ததாக ஹோம் சீசனில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.
அதன்பின் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 5 போட்டிகளிலும் விளையாடுகிறது. இதனை வெல்லும் பட்சத்தில் இந்திய அணியால் எளிதாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட முடியும். அந்த போட்டி இங்கிலாந்து மண்ணில் நடப்பதால், அதற்கேற்ப திட்டத்தை செயல்படுத்த வேண்டிய தேவை உள்ளது.
அதனால் ஹர்திக் பாண்டியாவை இந்திய அணி நிர்வாகம் இப்போதே தயார் செய்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து பிசிசிஐ அதிகாரிகள் தரப்பில் பேசுகையில், ஹர்திக் பாண்டியா ரெட் பாலில் பயிற்சியை தொடங்கியிருப்பதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. இதற்கு பின்னிருக்கும் நோக்கம் குறித்து பிசிசிஐ தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர், தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோருடன் ஆலோசித்தாரா என்பது தெரியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா கடைசியாக 2018ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தான் விளையாடி இருக்கிறார். கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட் மட்டுமல்லாமல் உள்ளூர் கிரிக்கெட்டில் கூட ஹர்திக் பாண்டியா ரெட் பாலில் விளையாடவில்லை. இதனால் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் முயற்சியில் ஹர்திக் இருந்தால், பரோடா அணிக்காக ரஞ்சி டிராபி தொடரில் விளையாடி ஃபிட்னஸை நிரூபிக்க வேண்டிய தேவை உள்ளது குறிப்பிடத்தக்கது.