குவாலியர்: இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதிய முதல் டி20 போட்டியில் ஹர்திக் பாண்டியா அடித்த ஒரு ராம்ப் ஷாட் இந்திய ரசிகர்களை வியப்பின் உச்சிக்கு கொண்டு சென்று இருக்கிறது. லப்பர் பந்து படத்தில் கெத்து கதாப்பாத்திரம் பந்தை கண்டுகொள்ளாமல் ஃப்ரண்ட்புட்டில் சிக்சர் அடிக்கும் காட்சி ஃபேமஸ். ஹர்திக் பாண்டியா அதே மாதிரி பின்னாடி தட்டிவிட்டு சிக்சர் விளாசினார்.
இந்திய அணி வெற்றியை நெருங்கிய நிலையில் 12 ஓவரின் மூன்றாவது பந்தை சந்தித்த ஹர்திக் பாண்டியா, அந்த பந்தை விக்கெட் கீப்பரின் தலைக்கு மேலே செல்லும் வகையில் பேட்டை மடக்கி அடித்தார். ஆனால், அவர் பந்தை அடிக்கும் போதும், அடித்த பின்னரும் பந்தை பார்க்கவே இல்லை. பந்து பறந்து சென்று ஃபோர் ஆனது.

பந்து பவுண்டரிக்கு செல்லுமா? ரன் ஓட வேண்டுமா? என எதையும் ஹர்திக் பார்க்கவில்லை. நிச்சயம் பந்து பவுண்டரியை சென்றடையும் என அவர் நம்பிக்கையுடன் இருந்தார். அவர் அடித்த அந்த ஷாட் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ஹர்திக் பாண்டியா தான் "ஒயிட் பால் கிங்" என அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும், அவர்தான் இந்த காலத்தின் ஸ்டைலிஷ் பேட்ஸ்மேன் எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இந்திய டி20 அணியின் துணை கேப்டன் பதவியை இழந்த நிலையில் ஹர்திக் பாண்டியா ஆடி இருக்கும் இந்த அபாரமான ஆட்டம் அவரது டி20 அனுபவத்துக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருந்தது. அவரை இந்திய அணியில் இருந்து நீக்கி விடுவார்கள் என்ற பேச்சை எல்லாம் அடித்து நொறுக்கியது இந்த ஒரு ஷாட்.
இந்த போட்டியில் வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 19.5 ஓவர்களில் 127 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அடுத்து ஆடிய இந்திய அணி அதிரடியாக ரன் சேர்த்தது. அபிஷேக் சர்மா 7 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 14 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். துவக்க வீரராக இறங்கிய சஞ்சு சாம்சன் 19 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து நிதிஷ் குமார் மற்றும் ஹர்திக் பாண்டியா இணைந்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
நிதிஷ் குமார் ஒருபுறம் நிதான ஆட்டம் ஆடினார். மறுபுறம் ஹர்திக் பாண்டியா அதிரடியாக ரன் சேர்த்தார். வெறும் 16 பந்துகளை மட்டுமே சந்தித்து, அவர் 39 ரன்களை சேர்த்தார். ஐந்து ஃபோர் மற்றும் இரண்டு சிக்ஸ் அடித்தார். இந்திய அணி 11.5 ஓவர்களில் எல்லாம் வெற்றி இலக்கை எட்டியது. 11 வது ஓவரின் மூன்று, நான்கு மற்றும் ஐந்தாவது பந்துகளில் ஹர்திக் பாண்டியா இரண்டு ஃபோர் மற்றும் ஒரு சிக்ஸ் அடித்தார். இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.