டெல்லி: வங்கதேச அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் ஹர்சித் ராணா அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லி மைதானத்தில் நடக்கவுள்ள இந்தப் போட்டியில், உள்ளூர் வீரரான ஹர்சித் ராணா களமிறங்குவது இந்திய அணிக்கு சாதகமாக அமையும் என்றும் பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணிக்காக களமிறங்கிய இளம் வீரரான ஹர்சித் ராணா, 13 போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதுமட்டுமல்லாமல் களத்தில் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக ஆக்ரோஷமாக செயல்பட்டு, அழுத்தமான நேரங்களில் சரியான வெரைட்டியில் பவுலிங் செய்தார். இதனால் ஹர்சித் ராணாவை பலரும் பாராட்டினர்.

இதனைத் தொடர்ந்து ஜிம்பாப்வே டி20 தொடருக்கு தேர்வு செய்யப்பட்டார். ஆனால் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காத நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் கொண்டு வரப்பட்டார். ஏற்கனவே ஹர்சித் ராணா மற்றும் கம்பீர் இருவரும் கேகேஆர் அணியில் ஒன்றாக இணைந்து பணியாற்றியவர்கள்.
இதனால் நிச்சயம் ஹர்சித் ராணாவுக்கு கம்பீரின் ஆதரவு இருக்கும் என்று பார்க்கப்பட்டது. அதற்கேற்ப இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஹர்சித் ராணாவை இந்திய அணிக்குள் மீண்டும் கொண்டு வந்தார். இந்த தொடரில் இந்திய அணி வீரர்கள் மோசமாக செயல்பட்டதால், மீண்டும் ஹர்சித் ராணாவால் இந்திய பிளேயிங் லெவனுக்குள் இடம்பிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் வங்கதேச டி20 தொடருக்கான இந்திய அணியில் ஹர்சித் ராணா தேர்வு செய்யப்பட்டார். முதல் டி20 போட்டியில் ஹர்சித் ராணா பிளேயிங் லெவனில் இடம்பெறாத நிலையில், இன்று நடக்கவுள்ள 2வது டி20 போட்டியில் நிச்சயம் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் 2வது டி20 போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடக்கவுள்ளது.
இதனால் உள்ளூர் வீரரான் ஹர்சித் ராணாவுக்கு சொந்த மண்ணில் நிச்சயம் வாய்ப்பு அளிக்கப்படும். ஆனால் எந்த வீரருக்கு பதிலாக ஹர்சித் ராணா பிளேயிங் லெவனில் கொண்டு வரப்படுவார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ஏனென்றால் கவுதம் கம்பீர் நீண்ட பேட்டிங் வரிசை வேண்டுமென்பதில் பிடிவாதமாக இருப்பார்.
தற்போது முதல் டி20 போட்டியில் அறிமுகமான நிதிஷ் குமார் ரெட்டிக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. முதல் டி20 போட்டியில் அழுத்தமான சூழலில் நிதானமாக பேட்டிங் ஆடிய அவர், 15 பந்துகளில் 16 ரன்கள் சேர்த்தார். அதேபோல் 2 ஓவர்களை வீசிய நிதிஷ் குமார் ரெட்டி, 17 ரன்களை விட்டுக் கொடுத்து விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை.
நிதிஷ் குமார் ரெட்டி களமிறங்கியதால் ரியான் பராக் மற்றும் ரிங்கு சிங் ஆகியோருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் கூடுதலாக ஒரு பவுலரை பிளேயிங் லெவனில் சேர்க்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அர்ஷ்தீப் சிங், மயங்க் யாதவ் ஆகியோருடன் இணைந்து 3வது வேகப்பந்துவீச்சாளராக ஹர்சித் ராணா செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலமாக ஹர்திக் பாண்டியாவின் பணிச்சுமையும் குறையும். ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக ஹர்சித் ராணாவை பவுலிங் செய்வதற்கு இந்திய அணி பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளது. மேலும், ஹர்சித் ராணா அறிமுகம் செய்யப்படுவதால், கேகேஆர் அணியின் ரசிகர்கள் சோகத்தில் உள்ளது தெரிய வந்துள்ளது. அவரை அன்-கேப்ட் வீரராக தக்க வைக்க முடியாது என்பதால் அந்த அணி ரசிகர்கள் சோகத்தில் இருக்கின்றனர்.