கான்பூர்: இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே ஆன கான்பூர் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தால் அது இந்திய அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும். இந்தியா அடுத்ததாக நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக மொத்தமாக எட்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.
அதில் இந்திய அணி ஐந்து வெற்றிகள் மற்றும் ஒரு டிரா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதிகபட்சமாக இரண்டு போட்டிகளில் மட்டுமே இந்தியா தோல்வி அடையலாம். மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்தாலும் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பெறுவதில் சிக்கல் எழும். இது குறித்து முழுமையாக பார்க்கலாம்.

2023 - 25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பெறும் அணிகள் மட்டுமே நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். தற்போது இந்திய அணி அந்த புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. 71 சதவீத வெற்றியை இந்திய அணி வைத்துள்ளது. ஆஸ்திரேலியா, இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய மூன்று அணிகளும் இந்த புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பெற வாய்ப்பு உள்ளது.
அந்த அணிகளை இந்திய அணி முந்தி முதல் இரண்டு இடங்களில் ஒரு இடத்தை உறுதி செய்ய வேண்டும் என்றால் தற்போது நடைபெற்று வரும் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவது அவசியம் ஆகும். ஒருவேளை இந்த போட்டி டிராவில் முடிவடைந்தால் அடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி ஐந்து வெற்றிகள் மற்றும் ஒரு டிரா செய்ய வேண்டும்.
அதாவது இரண்டு போட்டிகளில் மட்டுமே இந்திய அணி தோல்வி அடையலாம். அப்படி செய்தால் இந்திய அணி உறுதியாக முதல் இரண்டு இடங்களை பிடித்து விடும். மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகள் குறித்து இந்திய அணி பெரிதாக கவலைப்பட வேண்டிய தேவை இருக்காது. இந்திய மண்ணில் நடைபெறும் நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணி மூன்று போட்டிகளையும் வெல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.
ஆனால், ஆஸ்திரேலியா மண்ணில் நடைபெற உள்ள ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி இரண்டு வெற்றிகள் மற்றும் ஒரு டிரா செய்வது என்பது கடினமான ஒன்றாக இருக்கும். இந்த முறை ஆஸ்திரேலியா மிகவும் ஆக்ரோஷமாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தான் இந்திய அணி இப்போதே வங்கதேச அணிக்கு எதிராக வெற்றி பெற முயற்சிகளை எடுத்து வருகிறது.
கான்பூர் டெஸ்ட் போட்டியின் முதல் மூன்று நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், கடைசி இரண்டு நாட்களில் வங்கதேச அணியை வீழ்த்த இந்திய அணி முயற்சி செய்து வருகிறது. வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 233 ரன்கள் சேர்த்து ஆல் அவுட் ஆனது. அதன் பின் நான்காவது நாளின் பின் பாதியில் 34.4 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்து இந்தியா டிக்ளர் செய்தது. அதிவேகமாக இந்திய அணி ரன் சேர்த்தது. நான்காம் நாள் முடிவில் வங்கதேச அணி 26 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து இருக்கிறது. ஐந்தாவது நாளில் வங்கதேச அணியின் 8 விக்கெட்களை வீழ்த்தினால் இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெறுவது உறுதியாகி விடும்.