சென்னை: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 113 ரன்களை விளாசிய அஸ்வின், 2வது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலமாக அதிக முறை ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற ஷேன் வார்னேவின் சாதனையை அஸ்வின் சமன் செய்தார்.
101 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 37வது முறையாக ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். அதேபோல் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய மூத்த வீரர் என்ற சாதனையும் செய்துள்ளார். அதேபோல் ஒரே மைதானத்தில் இரு போட்டிகளில் சதம் மற்றும் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை முதல்முறையாக செய்துள்ளார்.

இதன் காரணமாக ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு ஆட்டநாயகன் விருது அளிக்கப்பட்டது. இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசுகையில், ஆட்டநாயகன் விருது வென்ற கணக்கையெல்லாம் மனதில் வைத்து கொள்ள மாட்டேன். எப்போது சேப்பாக்கம் மைதானத்தில் என் மக்கள் முன் விளையாடினாலும், அது பெருமைக்குரிய விஷயமாக பார்க்கிறேன். ஏனென்றால் இதே மைதானத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து தான் ஏராளமான டெஸ்ட் போட்டிகளை பார்த்திருக்கிறேன்.
ஜாம்பவான் வீரர்களின் ஆட்டங்களை பார்த்துள்ளேன். தற்போது மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ள அதே மைதானத்தில் சிறப்பாக செயல்பட்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இம்முறை மீண்டும் போராடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக பேட்டிங்கில் செயல்பட வாய்ப்பு கிடைத்தது. கடந்த சில ஆண்டுகளாக கிரிக்கெட்டில் என்ன செய்கிறேன் என்பதை கடந்து, கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடி விளையாட தொடங்கி இருக்கிறேன்.
2 விக்கெட்டுகள், 5 விக்கெட்டுகள், 50 ரன்கள் என்பதை கடந்து, மகிழ்ச்சியாக விளையாட வேண்டும் என்று மனநிலையில் உள்ளேன். அதுதான் சிறப்பாக பேட்டிங் செய்வதற்கு காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன். வழக்கமாக பேட்டிங்கை பொறுத்தவரை எளிமையான திட்டங்களை வைத்து கொள்வேன். எனது இன்னிங்ஸை போல் ஏராளமான முறை சக இந்திய வீரர்கள் செய்வதை பார்த்திருக்கிறேன். இம்முறை எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதற்காக ஜடேஜாவுக்கும் நன்றி கூட வேண்டும்.
இந்த இன்னிங்ஸின் கடினமான சூழலில் வழிநடத்தினார். முதல் நாள் ஆட்டத்தில் வெளிப்பட்டது கொஞ்சம் ஸ்பெஷலான ஆட்டம் தான். இன்றைய நாளிலும் சில விக்கெட்டுகளை வீழ்த்தியது நிம்மதியாக உள்ளது. பேட்டிங், பவுலிங் இரண்டிலும் சிறப்பாக செயல்படுகிறேன் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் பவுலராக தான் எனது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். அதனால் அனைத்து நேரங்களிலும் ஒரு பவுலராக தான் எனது மூளை செயல்படும்.
பேட்டிங் செய்ய களமிறங்கும் போது மட்டுமே பேட்ஸ்மேனாக சிந்திக்க முயற்சிப்பேன். அதுவும் சில நேரங்களில் எனது மனதினை விடவும் மூளை வேறு மாதிரி சிந்திக்க தொடங்கும். அதனை முடிந்த வரை கட்டுப்படுத்தி கொண்டு வருகிறேன். பேட்டிங் எனக்கு இயற்கையாகவே வருகிறேன். அதனால் இரண்டையும் என்னால் ஓரளவிற்கு சிறப்பாக செய்ய முடிகிறது என்று நினைக்கிறேன். ஆனால் இன்னும் சிறப்பாக செயல்பட பணியாற்றி வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.