சென்னை: வங்கதேசம் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப்பிற்கு வாய்ப்பு கிடைக்காது என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். அவருக்கு பதிலாக 3வது ஸ்பின்னரை இந்திய அணி நிர்வாகம் விளையாட வைக்கும் என்றும் கணித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பவுலிங் செய்த இளம் வேகப்பந்துவீச்சாளரான ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன்பின் நடந்த துலீப் டிராபி தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஆகாஷ் தீப், மீண்டும் வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தேர்வு செய்யப்பட்டார். இது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.

அதுமட்டுமல்லாமல் சேப்பாக்கம் மைதானம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், பும்ரா மற்றும் சிராஜை தவிர்த்து வேறு யாருக்கும் வாய்ப்பு கிடைக்காது என்று பார்க்கப்பட்டது. ஆனால் மைதானம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு உதவி செய்ததால், 3வது வேகப்பந்துவீச்சாளராக ஆகாஷ் தீப் சேர்க்கப்பட்டார். அதேபோல் முதல் இன்னிங்ஸில் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆகாஷ் தீப் அசத்தினார்.
முதல் இன்னிங்ஸில் 5 ஓவர்களை வீசிய ஆகாஷ் தீப், 19 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்பின் பேட்டிங்கில் 17 ரன்கள் சேர்த்த அவர், 2வது இன்னிங்ஸில் பெரியளவில் பவுலிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. வெறும் 6 ஓவர்களை மட்டுமே வீசிய ஆகாஷ் தீப், விக்கெட் வீழ்த்த முடியாமல் சிரமப்பட்டார். பிட்சில் உதவி கிடைக்காததால், ஆகாஷ் தீப் சரியான லெந்த் பந்துகளை சிறப்பாக வீசினார்.
இந்த நிலையில் வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றியை பெற்றுள்ளது. இதுகுறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பேசுகையில், வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்வதற்கான பாதி பணிகள் முடிந்துவிட்டது. வழக்கமாக கிஃப் கொடுக்கும் போது, அதனை சிறப்பாக அலங்காரம் செய்ய வேண்டும்.
எப்படி பரிசுப் பொருள் மேல் ரிப்பன் கட்டுவார்களோ, அதுபோல் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். மீண்டும் ஆட்டநாயகன் விருதை அஸ்வின் கைப்பற்றியுள்ளார். இம்முறை சொந்த மண்ணில் வென்றிருக்கிறார். அதேபோல் இந்தப் போட்டியில் ஆகாஷ் தீப் சில ஓவர்களை வீசிய பின், அவருக்கு கான்பூர் டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கிடைக்காது என்று நினைக்கிறேன்.
ஏனென்றால் பும்ரா, சிராஜ் விளையாடினால், அவர் பெஞ்ச் செய்யப்படுவார். ஏனென்றால் உள்ளூர் வீரரான குல்தீப் யாதவ் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார் என்று தெரிவித்தார். மேலும் 2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனால் 2வது டெஸ்டில் பும்ராவுக்கு ஓய்வு கொடுத்து யாஷ் தயாள் அறிமுகம் செய்யப்படவும் வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.