சென்னை: வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட சர்ஃபராஸ் கான் தேர்வு செய்யப்பட்டாலும், பிளேயிங் லெவனில் இடம் கிடைக்காது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சர்ஃபராஸ் கானை நினைத்து சோகமாக உணர்வதாக இந்திய முன்னாள் வீரர் கிரிஸ் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
இந்தியா - வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செப்.19ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ளது. ஏற்கனவே 16 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சீனியர் வீரர்கள் அனைவரும் அணிக்கு திரும்பியுள்ளனர். இதனால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. டி20 உலகக்கோப்பைக்கு பின் பும்ரா முதல்முறையாக களமிறங்கவுள்ளார்.

இந்த இந்திய அணியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட சர்ஃபராஸ் கான் மற்றும் துருவ் ஜுரெல் இருவருக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் துருவ் ஜுரெல் விக்கெட் கீப்பராக மட்டுமல்லாமல் பேட்ஸ்மேனாகவும் அழுத்தம் நிறைந்த சூழல்களில் சிறப்பாக விளையாடி வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.
அதேபோல் சர்ஃபராஸ் கான் 3 போட்டிகளில் விளையாடி 3 அரைசதம் உட்பட 200 ரன்களை விளாசினார். ஸ்பின்னர்களை அதிரடியாக விளாசக் கூடிய வீரராக சர்ஃபராஸ் கான் இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதனால் வங்கதேச டெஸ்ட் தொடரிலும் சர்ஃபராஸ் கான் மற்றும் ஜுரெலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் இருவருக்கும் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.
ஏனென்றால் இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கம்பேக் கொடுத்துள்ளார். ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கு முன்பாக ரிஷப் பண்ட் பேட்டிங் ஃபார்முக்கு திரும்ப வேண்டுமென்பதால், பிளேயிங் லெவனில் நேரடியாக அவர் இடம்பிடிப்பார். இன்னொரு பக்கம் சீனியர் வீரரான கேஎல் ராகுல் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்.
தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய கேஎல் ராகுல், இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் 85 ரன்களை விளாசி சிறப்பாக தொடங்கினார். ஆனால் மீண்டும் காயம் காரணமாக வெளியேறியதால், இந்திய அணியில் துருவ் ஜுரெல் தேர்வு செய்யப்பட்டார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விராட் கோலியும் விளையாடவில்லை என்பதால், ஏராளமானோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஆனால் சீனியர் வீரர்கள் பலரும் இந்திய அணிக்கு திரும்பிவிட்டதால், இளம் வீரர்கள் பெஞ்ச் செய்யப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சர்ஃபராஸ் கானை சென்னைக்கு வர வேண்டாம் என்று, துலீப் டிராபி 2வது போட்டியில் விளையாடலாம் என்று பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் கேஎல் ராகுலுக்கு தான் பிளேயிங் லெவனில் இடம் என்பதை பிசிசிஐ உறுதி செய்துள்ளது.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ஸ்ரீகாந்த் பேசுகையில், சர்ஃபராஸ் கானின் நிலையை நினைத்து சோகமாக உணர்கிறேன். சீனியர் வீரர்கள் அணிக்கு திரும்பும் போது வழிவிட வேண்டிய அவசியம் உள்ளது. இவர் மட்டுமல்லாமல் துருவ் ஜுரெலும் பெஞ்ச் செய்யப்படுவார் என்று நினைக்கிறேன். வெளிநாடுகளில் கேஎல் ராகுல் எப்போதும் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.
அதேபோல் அடுத்ததாக நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அந்த டெஸ்ட் தொடர் முடிவடைந்த பின் நாம் ஆஸ்திரேலியாவுக்கு பயணிக்கவுள்ளோம். அதனால் கேஎல் ராகுல் இந்திய அணிக்கு மிக முக்கியமான வீரராக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டாலும் சர்ஃபராஸ் கானை துலீப் டிராபியில் விளையாட அனுமதித்தது சிறந்த முடிவாகவே பார்க்கப்படுகிறது.